நிலவுக்குப் பக்கத்தில் சந்திராயன் -2| சாதித்துக் காட்டிய இந்தியா!

 

நிலவுக்குப் பக்கத்தில் சந்திராயன் -2| சாதித்துக் காட்டிய இந்தியா!

சந்திரயான்-2 விண்கலம், கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி பகல் 2.43 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை 5 முறைகளாக வெவ்வேறு தேதிகளில் உயர்த்தப்பட்டது. கடந்த மாதம் 14-ந் தேதி, அதிகாலை 2.21 மணிக்கு பெங்களூரு அருகேயுள்ள தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சமிக்ஞை மூலம் சந்திரயான்-2 விண்கலத்தில் உள்ள என்ஜின் இயக்கப்பட்டது. அதையடுத்து சந்திரயான்-2 பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது.

chandrayan 2

ஆகஸ்டு 20-ந் தேதி, பெங்களூரு தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சந்திரயான்-2 விண்கலத்தின் என்ஜினை விஞ்ஞானிகள் 1,738 வினாடிகள் இயக்கினர். அதைத் தொடர்ந்து சந்திரயான்-2 நிலவின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது. தொடர்ந்து ஆகஸ்டு 21, 28, 30 மற்றும் செப்டம்பர் 1-ந் தேதி என அதன் பாதை மாற்றி அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாற்றியமைக்கப்பட்ட பின்னர் சந்திரயான்-2 நிலவுக்கு 119 கி.மீ. அருகிலும், 127 கி.மீ. தொலைவிலும் சுற்றி வந்தது. இந்நிலையில் சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டக்கலனில் இருந்து விக்ரம் லேண்டர் நேற்று  முன் தினம் மதியம் சரியாக 1.15 மணிக்கு வெற்றிகரமாக பிரிந்தது.
 இந்நிலையில் இன்று அதிகாலை 3.42 மணியளவில்  விக்ரம் லேண்டர் நிலவுக்கு மிக அருகில், அதாவது 36 கி.மீ. அருகிலும், 110 கி.மீ. தொலைவிலும் சுற்றுமாறு கொண்டு வரப்பட்டது. 7-ந் தேதி அதிகாலை 1.30 மணிக்கு தொடங்கி 2.30 மணிக்குள் விக்ரம் லேண்டர் இன்னும் அருகே கொண்டு வரப்படும். அதையடுத்து அது மெதுவாக நிலவின் தென்பகுதியில் தரை இறங்கும். அதன் பிறகு சில மணி நேரத்தில், 6 சக்கரங்களை கொண்ட பிரக்யான் ரோவர், விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறி மிகவும் மெதுவாக நிலவின் தென் துருவப்பகுதியில் தரை இறங்கி ஊர்ந்து செல்லும்.
இஸ்ரோவின் தலைவர் டாக்டர் சிவன் கூறும்போது, “ சந்திரயான்-2 திட்டமானது, நிலவின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சியை நன்கு புரிந்து கொள்வதற்கு உதவும். அத்துடன் விரிவான நிலப்பரப்பு ஆய்வுகள், கனிம இயல் பகுப்பாய்வுகள், நிலவின் மேற்பரப்பில் பல ஆய்வுகள் செய்யவும் உதவும்” என குறிப்பிட்டார்.

chandrayan 2

விண்வெளி திட்டங்களை நிறைவேற்றுவதில் இந்தியா, உலகின் வல்லரசு நாடுகளுக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல என்பதை இதன் மூலமாக நிரூபித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் விஞ்ஞானிகள், உலகின் எந்தவொரு நாட்டினாலும் இதுவரை ஆராயப்படாத நிலவின் தென் துருவப் பகுதியை ஆராய்ந்து அறிந்துக் கொள்வதற்கு ரூ.1,000 கோடி செலவில் சந்திரயான்-2 என்ற விண்கல திட்டத்தை கையில் எடுத்து, அதில் சாதித்தும் காட்டியிருப்பதே இதற்கு சான்றாக இருக்கிறது.