நிலத்தை மீட்டுத் தரக்கோரி 16 பேர் கொண்ட குடும்பமே காவல்நிலையத்தில் தீக்குளிக்க முயற்சி !
இவர் தனது அண்ணன் தம்பிகளுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறார். இவர் வீட்டில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் வசித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சப்பள்ளி என்னும் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது அண்ணன் தம்பிகளுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறார். இவர் வீட்டில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் வசித்து வருகின்றனர். முருகேசனுக்குச் சொந்தமான 3 சென்ட் நிலத்தை அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் அருணாச்சலம், கேசவன் என்ற இரண்டு பேர் ஆக்கிரமித்துள்ளனர். இது குறித்து, அப்பகுதி காவல் நிலையத்தில் முருகேசன் புகார் அளித்துள்ளார். ஆனால், காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து, நேற்று திடீரென அந்த ஆக்கிரமித்த நிலத்தில் அருணாச்சலமும், கேசவனும் கட்டிடம் கட்டுவதற்காக ஆட்களைக் கூட்டி வந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முருகேசன், நேற்று மாலை மாத்தூர் காவல்நிலைய ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளார். அப்போதும் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த முருகேசன், இன்று காலை அவரது குடும்பத்தில் உள்ள அனைவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். கையில் மண்ணெண்ணெய்யோடு சென்ற முருகேசன், காவல்நிலையத்தில் அவர் குடும்பத்தில் உள்ள அனைவர் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி விட்டு அவரின் மீதும் ஊற்றிக் கொண்டு தீ பற்ற வைக்க முயற்சி செய்துள்ளார். இதில் 2 பள்ளி செல்லும் குழந்தைகளும் இருந்தனர்.
அதனைக் கண்டு பதறியடித்துக் கொண்டு ஓடிவந்த காவல்துறையினர், அவர்கள் அனைவரின் மீதும் தண்ணீர் ஊற்றிக் காப்பாற்றியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.