நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடுவது மீண்டும் தள்ளி போகும்! குற்றவாளிகளில் ஒருவர் குடியரசு தலைவரிடம் கருணை மனு தாக்கல்…..

 

நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடுவது மீண்டும் தள்ளி போகும்! குற்றவாளிகளில் ஒருவர் குடியரசு தலைவரிடம் கருணை மனு தாக்கல்…..

நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான வினய் குமார் சர்மா, தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி குடியரசு தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் குற்றவாளிகளை தூக்கிலிடுவது மீண்டும் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் கடந்த 2012 டிசம்பரில் ஓடும் பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கீழே வீசப்பட்டார். தீவிர மருத்துவ சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மாணவி உயிர் இழந்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர்களில் ஒருவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். ஒருவர் சிறார் என்பதால் சில ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 4 பேருக்கும் தூக்கு தண்டனை கிடைத்தது. நிர்பயாக வழக்கு குற்றவாளிகள் ஒருவர் பின் ஒருவராக பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்து தங்களது தண்டனை நிறைவேற்றுவதை தள்ளிபோட்டு வந்தனர்.

நிர்பயா வழக்கு குற்றவாளிகள்

இந்நிலையில் பிப்ரவரி 1ம் தேதியன்று குற்றவாளிகள் 4 பேரையும்  தூக்கிலிட நீதிமன்றம் புதிய டெத் வாரண்ட் பிறப்பித்தது. இதிலிருந்தும் தப்பிக்கும் நோக்கில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், தனது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து, நீதித்துறை மறுஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். உச்ச நீதிமன்றம் நேற்று அதனை ரத்து செய்தது. நிர்பயா வழக்கில் மற்றொரு குற்றவாளியான அக்சய் தாக்கூர் நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் curative மனு தாக்கல் செய்தார். அதன் மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது. 

முகேஷ் சிங்

இந்நிலையில், நிர்பயா வழக்கில் மற்றொரு குற்றவாளியான வினய் குமார் சர்மா நேற்று தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி குடியரசு தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்துள்ளார். வினய் குமார் சர்மா சார்பாக அவரது வக்கீல் குடியரசு தலைவரின் செயலகத்தில் நேரடியாக கருணை மனு தாக்கல் செய்தார். வினய் சர்மா குடியரசு தலைவருக்கு கருணை மனு தாக்கல் செய்துள்ளதால், திஹார் சிறை நிர்வாகம் இது குறித்த தகவலை நீதிமன்றத்துக்கு தெரிவித்து புதிய டெத் வாரண்ட் பிறப்பிக்க கோரிக்கை விடுக்கும். ஆக, பிப்ரவரி 1ம் தேதி நிர்பயாக வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடுவற்கான வாய்ப்புகள் மங்கி விட்டது.