“நா வேணும்னா இந்திய அணியில் விளையாடட்டுமா?” – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆவேசம்!

 

“நா வேணும்னா இந்திய அணியில் விளையாடட்டுமா?” – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆவேசம்!

இந்தியா அல்லது ஆஸ்திரேலியா அணியில் இணைந்து விளையாடுகிறேன் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல் ஆவேசமாக பேசியுள்ளார்.

லாகூர்: இந்தியா அல்லது ஆஸ்திரேலியா அணியில் இணைந்து விளையாடுகிறேன் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல் ஆவேசமாக பேசியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான கம்ரான் அக்மல் அந்நாட்டு அணிக்காக கடைசியாக 2017-ஆம் ஆண்டு விளையாடினார். அதற்கு பிறகு அவர் அணியில் இடம்பிடிக்கவில்லை. விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக அக்மல் பல போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக விளையாடியிருக்கிறார். ஆனால் நான்கு ஆண்டுகளாக அவருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்நிலையில், எதிர்வரும் வங்காளதேச தொடருக்கு தன்னை தேர்வு செய்வார்கள் என்று அவர் ஆர்வத்துடன் காத்திருந்தார். ஆனால் அவரது பெயர் இம்முறையும் சேர்க்கப்படவில்லை. இதனால் கொதித்தெழுந்த அக்மல் பாகிஸ்தான் தேர்வுக் குழுவை வெகுவாக சாடியுள்ளார்.

akmal / ttn

இதுதொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் பேசுகையில், “நான் மனம் தளரவில்லை. இருப்பினும், அனைத்திற்கும் ஓர் எல்லை உள்ளது. எவ்வளவு காலம் தான் காத்திருப்பது. கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளாக எனது திறமையை நிரூபித்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் என்னை சேர்க்கவில்லை. ஒன்று செய்யலாம்…நான் வேண்டுமானால் இந்தியா அல்லது ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி என் திறமையை நிரூபிக்கட்டுமா? அல்லது பாகிஸ்தான் பிரதமரை சந்தித்து இதோ, எனது ஐந்தாண்டு பர்ஃபாமான்ஸ் என்று காட்ட வேண்டுமா? பாகிஸ்தான் அணிக்காக விக்கெட் கீப்பராக மட்டும் விளையாட கூட நான் தயார்!” இவ்வாறு அக்மல் ஆக்ரோஷத்துடன் கூறியுள்ளார்.