நாய்களுக்கு பயந்து ஒளிந்த இளைஞரை எரித்து கொலை செய்த கொடூரம் : அதிர்ச்சி தரும் சம்பவம்!
நாய்களுக்கு பயந்து ஒளிந்தவரை, திருடன் என நினைத்து எரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாய்களுக்கு பயந்து ஒளிந்தவரை, திருடன் என நினைத்து எரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள திண்டோலி தவ்கி மதி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சுஜித் குமார். பட்டியலினத்தை சேர்ந்த இவர் கடந்த 19 ஆம் தேதி ரகுபுரா பகுதியில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு தெருநாய்கள் அவரை துரத்தியுள்ளன. இதனால் நாய்களுக்கு பயந்து சுஜித் குமார் அங்கிருந்த வீட்டில் ஒளிந்து கொண்டுள்ளார்.
அப்போது அந்த வீட்டிலிருந்தவர்கள் சுஜித்தை திருடன் என நினைத்து கூச்சலிட அங்கு கூட்டம் கூடியுள்ளது. அவர்களிடம் தான் திருடன் இல்லை என்று சுஜித் கூறியுள்ளார். ஆனாலும் அதை நம்பாத மக்கள், அவரை சரமாரியாக அடித்துள்ளனர். மேலும் அவரை தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதுகுறித்து சிலர் போலீசுக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்திருந்த சுஜித்தை மீட்டு அருகிலிருந்த அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுஜித், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதனால் சுஜித்தை தாக்கி கொலை செய்த வழக்கில் போலீசார் அப்பகுதியைச் சேர்ந்த 5 பேரை கைது செய்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.