‘நான் பரமசிவனாக மாறிவிட்டேன்’ : அப்ஸ்காண்ட் ஆன நித்தியானந்தாவின் புதிய வீடியோ!
அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களும் வழக்குகளும் நித்தியானந்தா மீது பாய்ந்தாலும், மனுஷன் எந்த ஒரு சலனமும் இல்லாமல் தினமும் மாலை 7 மணிக்கு யூட்யூபில் அவதரிக்கிறார்.
நித்தியானந்தாவின் தனிப்பட்ட செயலர்களில் ஒருவராக இருந்த ஜனார்த்தனா ஷர்மா என்பவர், நித்தியானந்தா ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தங்களது இரு மகள்களை மீட்டுத் தருமாறு குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். ஆள்கடத்தல், பண மோசடி, பாலியல் புகார்கள் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களும் வழக்குகளும் நித்தியானந்தா மீது பாய்ந்தாலும், மனுஷன் எந்த ஒரு சலனமும் இல்லாமல் தினமும் மாலை 7 மணிக்கு யூட்யூபில் அவதரிக்கிறார்.
இந்நிலையில் உலக மக்களை கவர ஆங்கிலத்தில் நய்யாண்டியோடு பேசி வரும் இந்த ஆசாமி, இன்றைய தினம் பக்தர்களிடம் பேசிய போது ஊடக துறை குறித்து பேசியுள்ளார். அதில், ஊடகத்துறையினர் எனக்கு சுமார் சாமி என்று பெயர் வைத்துள்ளார்கள். தமிழ் பத்திரிகையாளர்கள் வதந்தியை கூட ருசியாக எழுதுபவர்கள். மத தலைவர்கள் சிலர் தன்னை பற்றி அவதூறு பரப்பி வருகிறார்கள்.
அவர்களிடம் என் சிஷ்யர்கள் சென்று எடுத்துரைக்க வேண்டும். என்னை நெருப்பாற்றில் நீந்தி கடப்பவன் என்று கூறுகிறார்கள். ஆனால் அந்த நெருப்பாறே நான் தான். நான் எதையும் தாங்கும் இதயம் கொண்டவன். திருவண்ணாமலை தீபத்திற்கு வருவேனா இல்லையா என்பதை தற்போது கூற முடியாது. சிலர் என்மீது வழக்கு தொடர்ந்த போது நான் பரமஹம்ச நித்தியானந்தாவாக இருந்தேன். தற்போது நித்தியானந்த பரமசிவமாக மாறி விட்டேன்’ என்று கூறியுள்ளார்.
என்னதான் ஓடி ஒளிந்தாலும், மக்களிடம் தனக்குள்ள கிரேஸ் குறையக் கூடாது என்பதில் தெளிவாகவுள்ள நித்தியானந்தா எங்கிருந்து இந்த வீடியோக்களை வெளியிடுகிறார் என்பது தெரியவில்லை.
நித்தியானந்தா பாஸ்போர்ட் காலாவதியாகியுள்ளதால் ஜனார்த்தனா ஷர்மா மகள் நந்திதாவுடன் தரை வழியாக நேபாளம் சென்று, அங்கிருந்து கரீபியன் தீவுக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.