நான் படம் இயக்கினால் ஆர்யா தான் ஹீரோ: நடிகர் சந்தானம் 

 

நான் படம் இயக்கினால் ஆர்யா தான் ஹீரோ: நடிகர் சந்தானம் 

பல நாட்கள் படப்பிடிப்பில் இருந்த சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2 படத்தின் பாடல் வெளியிடு விழா சமீபத்தில் நடந்தது

பல நாட்கள் படப்பிடிப்பில் இருந்த சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2 படத்தின் பாடல் வெளியிடு விழா சமீபத்தில் நடந்தது. இயக்குநர்  ராம்பாலா இயக்கியிருக்கும் இப்படத்தில் இந்த முறை பேய்கள் மட்டுமில்லாமல் முழு நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். இந்த விழாவில் சந்தானம் பேசும் போது, “நீண்ட நாள் கழித்து அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. 

‘தில்லுக்கு துட்டு’ முதல் பாகத்தில் கடைசி 20நிமிடம் ரசிகர்கள் இடைவிடாமல் சிரித்தார்கள். அதை நேரடியாகப் பார்த்தோம். அதேபோல இப்படமும் முழுக்க முழுக்க நகைச்சுவையாக இருக்க வேண்டும் என்று அனைவரும் கலந்து பேசி படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். நான் இந்தளவுக்கு வளர்வதற்கு எனக்கு முதுகெலும்பாக இருப்பது மாறன், ஆனந்த்,குணா, சுந்தர், சேது மற்றும் ஜான்சன் ஆகியோர்கள் தான்.’லொள்ளு சபா’ தொலைக்காட்சி நிகழ்ச்சி வித்தியாசமானது என்று பெயர் வாங்கியது போல், இப்படத்திலும் வித்தியாசமான நகைச்சுவையாக இருக்க புது முயற்சி எடுத்திருக்கிறோம்.

இதில் ஷ்ரதா சிவதாஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். படத்தின் இரண்டாவது பாதி கேரளா பின்னணியில் இருப்பதால் கேரளா பெண்ணாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவரைதேர்ந்தெடுத்தோம். மொட்டை ராஜேந்திரன், விஜய் டிவி ராமர், விபின், சிவசங்கர் மாஸ்டர், விஜய் டிவி தனசேகர், சி.எம்.கார்த்திக்,ஊர்வசி, இயக்குநர் மாரிமுத்து, ஜெயப்ரகாஷ், பிரஷாந்த், இன்னும் பலரும் பணியாற்றியிருக்கிறார்கள். 

மேலும் கேமரா மேன் தீபக் நன்றாக பணியாற்றியிருக்கிறார் பேய் படத்திற்கு காட்சிகள் தான் முக்கியம். அது தரமாக இல்லையென்றால் பொம்மை படம் போல இருக்கும். அதற்காகக் கூடுதலாக உழைத்திருக்கிறார். அதேபோல், காதல் பாடலை நன்றாக அமைத்து கொடுத்திருக்கிறார் ஷபீர். இதில் வரும் இரண்டு பாடல்களும் சாண்டி தான் நடனம் அமைத்திருக்கிறார்.

மேலும் நடிகராக இருப்பதை விட தயாரிப்பாராக இருப்பது தான் கஷ்டம். என்னிடம் பலரும் ஆர்யா திருமணத்தைப் பற்றி தான் கேட்கிறார்கள். அதை அவரிடமே கேட்டு சொல்கிறேன். அதுமட்டும் இன்றி நான் இயக்குநரானால் ஆர்யாவை வைத்து தான் படம் எடுப்பேன். எந்த படம் எடுத்தாலும் நல்ல படமாக இயக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.

என்னை ‘லொள்ளு சபா’வில் அறிமுகப்படுத்திய பாலாஜி அண்ணன், சினிமாவில் அறிமுகப்படுத்திய சிம்பு  அவர்களுக்கு நன்றி. என்னை கதாநாயகனாக்கிய ரசிகர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். என் ரசிகர்கள் நீங்க தான் என்னுடைய முன்மாதிரி என்று கூறும்போது மகிழ்ச்சியாக இரு்கிறது” என்று பேசினார் சந்தானம்.