நாடாளுமன்றத்தை கூட்டுங்கள்: இலங்கைக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

 

நாடாளுமன்றத்தை கூட்டுங்கள்: இலங்கைக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என இலங்கையை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

வாஷிங்டன்: நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என இலங்கையை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவிற்கும் அதிபர் சிறிசேனாவுக்கும் இருந்துவந்த மோதலை அடுத்து ரணிலை பிரதமர் பதவியில் இருந்து கடந்த 26-ம் தேதி அதிரடியாக நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை புதிய பிரதமராக சிறிசேனா நியமித்தார். இதனால் இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் அதிபர் தனது பதவியை பறிக்க அதிகாரம் இல்லை. நான்தான் இலங்கையின் பிரதமர் எனவும், அவசரமாக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்வும் ரணில் விக்ரமசிங்கே வலியுறுத்தினார். இருப்பினும் சிறிசேனா நாடாளுமன்றத்தை கூட்டாமல் வரும் நவம்பர் 16-ம் தேதி வரை முடக்கியுள்ளார். இதுகுறித்து சிறிசேனாவுக்கு கடிதம் எழுதிய சபாநாயகர் கரு.ஜெயசூர்யா, ரணில்தான் பிரதமராக நீடிக்க வேண்டும் எனவும், நாடாளுமன்ற முடக்கத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு இலங்கை அதிபரை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டின் உள்துறை செய்தி தொடர்பாளர் ஹேதர் நௌரட் வெளியட்டுள்ள அறிக்கையில் அதிபர் சிறிசேனா, சபாநாயகருடன் கலந்து ஆலோசித்து உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டவேண்டும் . ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இலங்கையில் அதிகாரத்தில் இருக்க வேண்டும். இலங்கை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அவர்களின் விருப்பப்படியே பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி அமைக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.