நம்பி வந்த காதலன் மீது ஆசிட் வீச்சு நடத்திய இளம்பெண்: விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலன் மீது இளம்பெண் ஒருவர் ஆசிட் வீச்சு நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி: திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலன் மீது இளம்பெண் ஒருவர் ஆசிட் வீச்சு நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள விசாகபுரியில், இருசக்கர வாகனத்தில் சென்ற காதல் ஜோடி ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அப்பகுதிவாசிகள் போலீசாருக்கு தகவல் கூறியுள்ளார்கள். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காதலர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதில் அந்த பெண்ணுக்கு லேசான காயங்களே ஏற்பட்ட நிலையில், அந்த இளைஞரின் முகம், கழுத்து போன்ற பகுதிகளில் அதிக காயம் ஏற்பட்டிருந்தது. இதுகுறித்து பெண்ணிடம் நடத்திய விசாரணையில் யார் ஆசிட் வீசியது என்பது தெரியவில்லை என்று கூறிவிட்டார். இதனால் வழக்கு குறித்து எதுவும் தெரியாமல் போலீசார் குழம்பிப் போயினர்.
இந்நிலையில், ஆசிட்டால் தாக்கப்பட்ட இளைஞன் கண் விழித்து நேற்று வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. அதில், ‘நானும் என் காதலியும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்தோம். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விடலாம் என்று நான் கூறினேன். அவள் அதை ஏற்க மறுத்து விட்டாள். மாறாக என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினாள். கடந்த 11 ஆம் தேதி இது குறித்து கடைசியாகப் பேசலாம் வா என்று அழைத்தாள். நானும் சென்றேன். இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, நீ ஹெல்மெட்டை கழட்டி விடு, எனக்குப் பிடிக்கவில்லை என்றாள். நானும் அவள் சொல்கிறாள் என்று கழட்டினேன். அதற்குள் அவள் என்மீது ஆசிட்டை ஊற்றி விட்டாள்’ என்று கூறியுள்ளார்.
இளைஞரின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு அப்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இது குறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.