நடிகர் விஜய் பண்பானவர்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புகழாரம்
சர்கார் திரைப்படம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், நடிகர் விஜய் பண்பானவர் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புகழாரம் சூடியுள்ளார்
சென்னை: சர்கார் திரைப்படம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், நடிகர் விஜய் பண்பானவர் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புகழாரம் சூடியுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாகி, பாக்ஸ் ஆபீஸில் இமாலய ஹிட் அடித்துள்ளது. படத்தின் கதை திருட்டு விவகாரம், ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் பேச்சு தொடங்கி, வரலட்சுமி கதாபாத்திரம் வரை படம் வெளியாவதற்கு முன்பு தொடங்கிய பிரச்னை தற்போது வரை நீடித்து வருகிறது.
அதேபோல், தமிழக அரசியலின் தற்போதைய நிலவரம், மக்கள் பிரச்னைகளில் நடத்தப்படும் அரசியல் என சர்கார் படமும் கடுமையான அரசியலை பேசியுள்ளது.இலங்கையில் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் துப்பாக்கிச்சூடு தாக்குதல், கந்து வட்டி, ஓட்டுக்கு பணம் வாங்குவது, விவசாயிகளின் பிரச்னை, கள்ள ஓட்டு, தற்போதைய தமிழக அரசியல் களம் குறித்து விரிவாக பேசப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.
சர்கார் படத்துக்கு இதுவரை கலவையான விமர்சனங்கள் வந்துள்ள நிலையில், ஆளும் கட்சி அதிருப்தி அடையும் விதமான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், அதை படக்குழுவே நீக்க வேண்டும் என ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விஜய் பண்பானவர், அனைவரிடமும் மதிப்புடன் நடந்துகொள்பவர் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புகழாரம் சூடியுள்ளார். மேலும், திரைப்படங்கள், நாடகங்கள் மூலமாக அரசியல் ரீதியான கருத்துகளை கூறலாம். திரைப்படங்கள் மூலமாக சமுதாய சீர்திருத்த கருத்துகளை சொல்வது வழக்கமான ஒன்றுதான் எனவும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.