நடத்தையில் சந்தேகம்: மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவர்

 

நடத்தையில் சந்தேகம்: மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கொடூர கணவனை போலீசார் தேடி வருகிறார்கள். 

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கொடூர கணவனை போலீசார் தேடி வருகிறார்கள். 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடம் மரவபாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி செந்தில்குமார் (40). இவரது மனைவி துளசி மணி (35). கணவன்- மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் தகராறு முற்றியதாக கூறப்படுகிறது. அப்போது துளசி மணி வீட்டின் வெளியே நாற்காலியில் உட்கார்ந்து இருந்தார்.

ஆத்திரத்தில் இருந்த செந்தில் குமார் தனது மனைவியின் பின் பக்கமாக சென்று காய்கறி அறுக்கும் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார். அதிகாலையில் அலறல் சத்தம் கேட்டு, செந்தில் குமாரின் மகள் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்த போது தனது தாய் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் கூச்சலிட்டார். இதனை கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் குண்டடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் துளசிமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது துளசிமணி நடத்தையில் சந்தேகத்தில் அவரை செந்தில் குமார் கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்துள்ளது. செந்தில் குமார் மீது வழக்கு பதிவு செய்து தேடிவருகிறார்கள்.