நகைக்கடை உரிமையாளர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி…மனைவி மற்றும் மகன்களின் கழுத்தறுத்து கொன்ற பயங்கரம்!
நேற்றிரவு மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில் நாங்கள் மகாராஜ் விடுதியில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகக் கூறியிருந்தார்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஊரணி பகுதியில் செல்வராஜ். நகைக்கடை வைத்து நடத்தி வந்த இவருக்கு செல்லம் என்ற மனைவியும், நிகில் மற்றும் முகில் என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் செல்வராஜ் தனது குடும்பத்துடன் திருச்சியில் உள்ள மகாராஜ் என்ற விடுதியில் அரை எடுத்து தங்கியுள்ளார். இதையடுத்து தனது உறவினரான குரு கணேஷுக்கு செல்வராஜ் செல்போனில் நேற்றிரவு மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில் நாங்கள் மகாராஜ் விடுதியில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகக் கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து குரு கணேஷ் மகாராஜ் விடுதிக்கு வந்து பார்த்தபோது, செல்லம் மற்றும் மகன்கள் இருவரும் கழுத்தறுக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் இறந்துகிடந்தனர். செல்வராஜ் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதையடுத்து போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவலின்படி செல்வராஜை மீட்ட போலீசார், அவரை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மற்ற மூவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதை தொடர்ந்து விடுதி அறையில் நடத்திய சோதனையில், செல்வராஜ் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், என் மூத்த மகன் மனவளர்ச்சி குன்றி இருப்பதால் அவனை பார்த்துக்கொள்ள முடியவில்லை. கடன் தொல்லை அதிகமாகி விட்டது. இதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள போகிறோம் என்று எழுதியிருந்தார்.
இந்த வழக்கில் மனைவி, மகன்களை செல்வராஜ்தான் கழுத்தறுத்து இருப்பார் என்பதால் இதை கொலை வழக்காகப் பதிவு செய்த போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.