தொடர்ந்து 4வது நாளாக வெற்றியை தக்க வைத்த காளை! சென்செக்ஸ் 453 புள்ளிகள் உயர்ந்தது

 

தொடர்ந்து 4வது நாளாக வெற்றியை தக்க வைத்த காளை! சென்செக்ஸ் 453 புள்ளிகள் உயர்ந்தது

தொடர்ந்து 4வது வர்த்தக தினமான இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 453 புள்ளிகள் உயர்ந்தது.

டி.வி.எஸ். மோட்டார் உள்பட பல முன்னணி நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் முதலீட்டாளர்களுக்கு திருப்திகரமாக இருந்தது இது பங்கு வர்த்தகத்தின் ஏற்றத்துக்கு வலு சேர்த்தது. ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். உள்நாட்டு மற்றும் அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது உள்ளிட்ட காரணங்களால் இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. 

நிர்மலா சீதாராமன்
 
சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில், யெஸ் பேங்க், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ஸ்டேட் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி மற்றும் மாருதி உள்பட 21 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், வேதாந்தா, பவர்கிரீட் மற்றும் ஓ.என்.ஜி.சி. உள்பட 9 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பஜாஜ் ஆட்டோ

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,427 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,056 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும் 197 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.147.88 லட்சம் கோடியாக உயர்ந்தது. நேற்று வர்த்தகம் முடிவடைந்தபோது நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.146.33 லட்சம் கோடியாக இருந்தது.

முதலீட்டாளர்களுக்கு லாபம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 453.07 புள்ளிகள் உயர்ந்து 39,052.06 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 122.35 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,586.35 புள்ளிகளில் முடிவுற்றது.