தொடர்ந்து 2வது நாளாக லாபத்தை அள்ளி கொடுத்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 227 புள்ளிகள் உயர்ந்தது….

 

தொடர்ந்து 2வது நாளாக லாபத்தை அள்ளி கொடுத்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 227 புள்ளிகள் உயர்ந்தது….

தொடர்ந்து 2வது நாளாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 227 புள்ளிகள் உயர்ந்தது.

பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. இருப்பினும் பின்னர் ஏற்றம் காண தொடங்கியது. அன்னிய முதலீட்டாளர்கள் மீண்டும் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்ட தொடங்கியது போன்ற காரணங்களால் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. நேற்று (வியாழக்கிழமை) மட்டும் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளில் ரூ.1,352 கோடி நிகர முதலீடு செய்துள்ளனர்.

அன்னிய முதலீட்டாளர்கள்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், அல்ட்ராடெக் சிமெண்ட், டெக்மகிந்திரா, கோடக்மகிந்திரா வங்கி, ஆக்சிஸ் வங்கி, டைட்டன், எல் அண்டு டி மற்றும் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் உள்பட 22 நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பவர்கிரிட், இண்டஸ்இந்த் வங்கி, சன்பார்மா மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்பட 8 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

அல்ட்ராடெக் சிமெண்ட்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,393 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,136 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 173 நிறுவனங்களின் பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.160.27 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக. இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.94 ஆயிரம் கோடி  லாபம் கிடைத்தது.

பவர்கிரிட்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 226.79 புள்ளிகள் உயர்ந்து 41,613.19 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 67.90 புள்ளிகள் ஏற்றம் கண்டு 12,248.25 புள்ளிகளில் முடிவுற்றது.