தொடரும் காளையின் வெற்றி! சென்செக்ஸ் 115 புள்ளிகள் உயர்ந்தது

 

தொடரும் காளையின் வெற்றி! சென்செக்ஸ் 115 புள்ளிகள் உயர்ந்தது

இந்த வாரத்தில் தொடர்ந்து 3வது வர்த்தக தினமாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 115 புள்ளிகள் உயர்ந்தது.

இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடனே தொடங்கியது. முதலீட்டாளர்கள் முன்னணி நிறுவனங்களின் பங்குகளை வாங்கி குவித்தனர். சைரஸ் மிஸ்திரியை மீண்டும் டாடா சன்ஸ் செயல் தலைவராக நியமனம் செய்ய தீர்ப்பாயம் உத்தரவிட்டதால் டாடா குழுமத்தின் பல நிறுவனங்களின் பங்கு விலை இன்று உயர்ந்தது.

யெஸ் பேங்க்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், யெஸ் பேங்க், டி.சி.எஸ்., பார்தி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்பட 16 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், வேதாந்தா, எச்.டி.எப்.சி. நிறுவனம், சன் பார்மா, இண்டஸ்இந்த் வங்கி, பவர்கிரிட் மற்றும் டெக்மகிந்திரா உள்பட 14 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

வேதாந்தா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,251 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,241 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 173 நிறுவனங்களின் பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.155.18 லட்சம் கோடியாக உயர்ந்தது.

பங்கு வர்த்தகம் நிலவரம்

இன்று பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 115.35 புள்ளிகள் உயர்ந்து 41,673.92 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 38.05 புள்ளிகள் ஏற்றம் கண்டு 12,259.70 புள்ளிகளில் நிலை கொண்டது.