தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு…ஓராண்டாகியும் மாறாத வடு; நினைவஞ்சலி கூட்டத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி!

 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு…ஓராண்டாகியும் மாறாத வடு; நினைவஞ்சலி கூட்டத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு, நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு, நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி அருகே குமரெட்டியாபுரத்தில் செயலபட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை தெரிவித்தனர். தொடர்ந்து அமைதியாக நடைபெற்ற போராட்டமானது கடந்த ஆண்டு மே மாதம் 22ம் தேதி 100வது நாளை எட்டியது.

sterlite copper

இதனையொட்டி, போராட்டத்தை தீவிரப் படுத்த விரும்பிய ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிடும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அந்த போராட்டத்தை ஒடுக்கும் பொருட்டு, அதற்கு தடை விதித்த மாவட்ட நிர்வாகம், அங்கு 144 தடை உத்தரவையும் அமல்படுத்தியது.

strelite

எனினும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட தடையை மீறி பேரணியாக மக்கள் சென்றனர். அப்போது ஏற்படத் கலவரத்தின் போது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண்கள் உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

sterlite protest

இதையடுத்து, தமிழக அரசின் உத்தரவின் பேரில் விதிமுறைகளை சரியாக பின்பற்றாத ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது. துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையம் இது தொடர்பாக விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி கோரி, பேராசிரியை பாத்திமாபாபு சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் 22-ம் தேதி நினைவஞ்சலி கூட்டம் நடத்த அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

sterlite protest

இதனைத் தொடர்ந்து, நினைவஞ்சலி கூட்டத்துக்கு உள் அரங்குகளில் அனுமதி வழங்கலாம் என கருத்து தெரிவித்து, கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் மற்றும் பேசுபவர்களின் விவரங்களை அரசு வழக்கறிஞரிடம் மனுதாரர் தரப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

இந்நிலையில், வழக்கு விசாரணை இன்று மீண்டும் நடைபெற்ற போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு வரும் 22ம் தேதி நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.