துரைமுருகன் மகன் மீது வழக்குப்பதிவு: நிறுத்தப்படுமா வேலூர் தொகுதி தேர்தல்!?
வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் மீது காட்பாடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
காட்பாடி: வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் மீது காட்பாடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வருமானவரி சோதனை
காட்பாடியில் உள்ள துரைமுருகனின் வீட்டில் வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் கடந்த மாதம் 29 மற்றும் 30-ஆம் தேதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் முக்கிய ஆவணங்கள், 10லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து துரைமுருகனின் நெருங்கிய நண்பரான பூஞ்சோலை சீனிவாசன் என்பவரின் சிமெண்ட் குடோனில் இருந்து, 11 கோடி 83 லட்சம் ரூபாய் பணம், பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணத்தை வாக்காளர்களுக்குக் கொடுக்க வைத்திருந்ததாகப் பூஞ்சோலை சீனிவாசன் காவல்நிலையத்தில் கூறியதாகக் கூறப்படுகிறது.
கதிர் ஆனந்த் மீது வழக்குப் பதிவு
இந்நிலையில் தேர்தல் ஆணையம் உத்தரவை அடுத்து, காட்பாடி போலீசார் கதிர் ஆனந்த் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலீசாரின் முதல் தகவல் அறிக்கையின் படி, வேட்பு மனுத் தாக்கலில் அவர் ரூ9 லட்சம் மட்டுமே வீட்டில் இருப்பதாக தெரிவித்து இருந்த நிலையில், அவரது வீட்டிலிருந்து 10 லட்சத்து 57 ஆயிரத்துப் பத்து ரூபாயை அதிகாரிகள் கைப்பற்றியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையமே முடிவு எடுக்கும்
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு , வேலூரில் கதிர் ஆனந்த் வீட்டிலிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையமே முடிவு எடுக்கும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்க: இதை மட்டும் செய்யாதீங்க: அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்த இளையராஜா