திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கு ரூ.15 லட்சம் கொடுத்த லாரன்ஸ்: டி. ஆர். உருக்கமான நன்றி!

 

திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கு ரூ.15 லட்சம் கொடுத்த லாரன்ஸ்: டி. ஆர். உருக்கமான நன்றி!

விநியோகஸ்தர்கள் சங்கத்தில் உள்ள நலிவடைந்த உறுப்பினர்களுக்கு அவர் 15 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார் நடிகர் ராகவா லாரான்ஸ்

நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தொடர்ந்து மாற்றுத்திறனாளி மற்றும் ஏழை மக்களுக்கு உதவி வருகிறார்.  அந்த வரிசையில் தற்போது கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி அளித்துள்ளார். அதில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், ஃபெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சமும் கொடுத்துள்ளார். 

மேலும் நடனக் கலைஞர்கள்  சங்கத்திற்கு ரூ.50 லட்சமும் நிதியுதவி அளித்துள்ள அவர்  மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சமும், ஏழை மக்களுக்கு  ரூ.75 லட்சமும் வழங்கியுள்ளார்.  தன்னால் முடிந்த அளவு தாராளமாக அள்ளிக்கொடுத்துள்ள லாரன்ஸுக்கு பலரும் நெகிழ்ச்சியுடன் பாராட்டு தெரிவித்துள்ளனர்.  தற்போது 4 மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தில் உள்ள நலிவடைந்த உறுப்பினர்களுக்கு அவர் 15 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார் நடிகர் ராகவா லாரான்ஸ்.

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு ,காஞ்சிபுரம்,  திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி. ராஜேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் தற்போது சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவராக இருக்கிறேன்.

எங்கள் சங்கத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிதத்தினர் தொழில் செய்து நஷ்டமடைந்து நலிந்த நிலையில் இருக்கின்றனர். தொலைநோக்கு சிந்தனையோடு அவர்களுக்கு மாதா மாதம் எங்களால் முடிந்த ஒரு சின்ன உதவித் தொகையை வழங்க ஒரு நிதி திரட்ட திட்டம் தீட்டி வைத்திருந்தோம்.

அந்த திட்டத்தை மார்ச் முடிந்து ஏப்ரல் மாதம் தொடங்க இருந்தோம். அதன் தொடக்கமாக ஒரு தொகையை வழங்க பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேல் படம் எடுக்காமல் இருந்த நான் இன்னிசைக் காதலன் என்ற படத்தை ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருந்தேன்.

ஆனால் கொரோனா பாதிப்பால், திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டது. திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுவிட்டது. நாடெங்கும் ஊரடங்கு என்று கைகள் கட்டப்பட்ட சூழ்நிலையில் என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தேன்.

அந்த சமயத்தில் என் நினைவுக்கு வந்தவர் என் நண்பரும் நடிகருமான திரு.ராகவா லாரன்ஸ் அவர்கள். என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருப்பவர்.

tt

இந்நிலையில் எங்கள் சங்கத்தின் நிலை குறித்த என் தர்மசங்கட நிலைமையை எடுத்துரைத்தேன். அவர் உடனே “அண்ணே, உங்களுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்” என்றார். “தம்பி எனக்கு எதுவும் வேண்டாம். என் சங்கத்திலிருக்கும் நலிவடைந்தவர்களுக்காக செய்தால் போதும்” என்றேன். 

உடனே திரு.ராகவா லாரன்ஸ் மனமுவந்து எங்கள் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க அறக்கட்டளைக்கு 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அனுப்பிவைத்தார்.

நேற்று நடந்ததை இன்று மறந்துவிடும் இந்த உலகத்தில் கடந்த காலத்தை மறக்காத  அந்த கனிந்த உள்ளத்துக்கு நன்றி. அவரின் தர்ம சிந்தனையும், தயாள குணமும் தழைக்கட்டும்.

என் சார்பாகவும் எங்கள் சங்க நிர்வாகிகள் சார்பாகவும் அனைத்து சங்க உறுப்பினர்கள் சார்பாகவும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.