திருநங்கையாக மாற அனுமதி கேட்ட இளைஞர்: தந்தை மறுத்ததால் எடுத்த விபரீத முடிவு!?
பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு குடும்பத்தினர் அனுமதி மறுத்த காரணத்தால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருகம்பாக்கம்: பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு குடும்பத்தினர் அனுமதி மறுத்த காரணத்தால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன் மகன் பார்த்தசாரதி. பிசிஏ பட்டதாரியான பார்த்தசாரதி, கல்லூரி படிப்பு முடிந்தும் வேலை ஏதும் தேடாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்துள்ளார். மேலும் அவர் தன் ஆண் நண்பர்களுடன் சேராமல் இருந்துள்ளார். இதனால் அவரது நடவடிக்கைகளில் மாறுதல்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பார்த்தசாரதி தனது தந்தையிடம் திடீரென்று வந்து தான் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளப் போகிறேன். எனக்கு அனுமதி தாருங்கள் என்று கேட்டுள்ளார். ஆனால் கஜேந்திரன் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
இதனால் மனமுடைந்த பார்த்தசாரதி வீட்டை விட்டு வெளியேறி மணலியில் உள்ள மூன்றாம் பாலினத்தவர்கள் குழுவில் சேர்ந்துள்ளார். இதையறிந்த கஜேந்திரன் அவரை தேடிக் கண்டுபிடித்து ஒழுங்காக வீட்டிற்கு வந்து சேர் என்று கூறிவிட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த பார்த்தசாரதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த மகனை அவரது போக்கில் விடாமல் வீட்டிலேயே முடக்கி வைத்ததே இந்த தற்கொலை சம்பவத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.