திருச்செந்தூரில் யாகசாலை பூஜை: விண்ணை முட்டிய அரோகரா கோஷம்!
சூரசம்ஹாரம் வரும் நவம்பர் 2 அன்று மாலை 4:30 மணியளவில் நடைபெறவுள்ளது
முருக பெருமானுக்கு உகந்த கந்தசஷ்டி திருவிழா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் யாகசாலை பூஜையுடன் துவங்கியது.
கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியுள்ள நிலையில் வரும் வரும் 3 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இதை முன்னிட்டு அ றுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி திருவிழா இன்று தொடங்கியது.
இதன் காரணமாக இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 1:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. இதனையடுத்து காலை 5:30 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினார்.
இந்நிலையில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களிருந்தும் திருச்செந்தூரை நோக்கி படையெடுத்துள்ள மக்கள், கடலில் புனித நீராடி சாமியை வழிபட்டு சஷ்டி விரதத்தை துவக்கியுள்ளனர். கந்த சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் நவம்பர் 2 அன்று மாலை 4:30 மணியளவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.