திருச்சியில் ஊடகத்துறையினருக்கு கொரோனா பரிசோதனை முகாம்!

 

திருச்சியில் ஊடகத்துறையினருக்கு கொரோனா பரிசோதனை முகாம்!

ஊடகப்பிரிவினருக்கு கொரோனா பரிசோதனை செய்ய முகாம்களை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ், தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பரவியுள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர் என பலர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல சென்னையில் ஊடகப்பிரிவை சேர்ந்த இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்க்குமாறு பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனையடுத்து, ஊடகத்துறையில் பணியாற்றும் நபர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

ttn

அதே போல ஊடகப்பிரிவினருக்கு கொரோனா பரிசோதனை செய்ய முகாம்களை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் படி, திருச்சியில் இன்று கொரோனா பரிசோதனை முகாமை திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தொடக்கி வைத்துள்ளார். அந்த முகாமில் முதல்கட்டமாக அனைத்து நாளிதழ், வார இதழ், மாத இதழ், மாதமிருமுறை, வாரமிருமுறை இதழ் உள்ளிட்ட அனைத்து இதழ்களில் பணிபுரியும் போட்டோகிராபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, காட்சி ஊடகத்தில் பணியாற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை ரேபிட் கருவியை கொண்டு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.