திருச்சானூர் கோயிலில் பத்மாவதி தாயார் மோகினி அவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

 

திருச்சானூர் கோயிலில் பத்மாவதி தாயார் மோகினி அவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரமோற்சவத்தின் 5ம் நாளான இன்று பத்மாவதி தாயார் மோகினி அவதாரத்தில் பல்லக்கில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர். 

திருப்பதி:

திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் டிசம்பர் 4 ஆம் தேதி  காலை 8.30 மணிக்கு கோயிலில் உள்ள தங்க கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க பிரம்மோற்சவத்துக்கான கொடி ஏற்றப்பட்டது.

thiru

பிரம்மோற்சவ விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் தினமும் பத்மாவதி தாயார் காலை மற்றும் இரவு என்று இரண்டு வேளைகளும் பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

அதன்படி பிரமோற்சவத்தின் 5ம் நாளான இன்று காலை பல்லக்கில் பத்மாவதி தாயார் மோகினி அவதாரத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

அதனை தொடர்ந்து, மதியம் 11 மணி முதல் 1.30 மணிவரை கிருஷ்ணமுக மண்டபத்தில் தாயாருக்கு பால், தயிர், தேன், மஞ்சள், இளநீர், சந்தனம், மூலிகை பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

thiru

அதனையடுத்து இன்று மாலை 3 மணி முதல் 5 மணிவரை வசந்த உற்சவமும், மாலை 6 மணி முதல் 7 மணி வரை ஊஞ்சல் சேவையும் நடைபெற உள்ளது. 

இதையடுத்து, இரவு 9 மணிக்கு பத்மாவதி தாயார் அலங்கரிக்கப்பட்ட லட்சுமி ஆரம் உட்பட பல்வேறு ஆபரணங்களுடன் மகாலட்சுமி அலங்காரத்தில் கஜ வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் வலம் வந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

மேலும் கோயில் ஜீயர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடிய படி வீதி உலாவில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ஆந்திரம், தெலங்கானா ,தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்களின் நடன நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.

thiruchanur

பிரம்மோற்சவ விழாவில் நாளை சர்வ பூபால வாகனம் மற்றும் சிகர  நிகழ்ச்சியான கருட சேவையும் நடைபெறுகிறது.

அதனை தொடர்ந்து திங்கட்கிழமை சூரியபிரபை வாகனம் மற்றும் சந்திரபிரபை வாகனத்திலும் அதன் தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமை திருத்தேர் மற்றும் குதிரை வாகனத்திலும் பத்மாவதி தாயார் அருள்பாலிக்கிறார்.

அதன் பின்னர் புதன்கிழமை சக்கரஸ்நானம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து வியாழக்கிழமை புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவுபெறுகிறது.