திமுகவை காப்பாற்றிய டி.என்.சேஷனுக்கு அறிவாலயத்தில் சிலை வையுங்கள்: கராத்தே தியாகராஜன் பரபரப்பு பேட்டி!
1990ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை தலைமை தேர்தல் ஆணையராக இருந்தபோது பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் உடல்நலக்குறைவால் காலமானார். 87 வயதான சேஷன் டி.என்.சேஷன் இந்திய ஆட்சிப்பணி அலுவலராக இருந்து ஓய்வு பெற்ற இவர், 1990ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை தலைமை தேர்தல் ஆணையராக இருந்தபோது பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
இந்தியாவின் 10வது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பு வகித்த அவர் தேர்தல் விதிமுறைகளில் கொண்டு வந்த சட்ட திருத்தங்கள் பலருக்கும் பீதியை ஏற்படுத்தியது. டிஎன் சேஷன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருவதோடு இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சேஷன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய கராத்தே தியாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘1996ம் வருடம் தமிழ் மாநில காங்கிரஸ் தனியாக பிரிந்த நேரத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியானது. அப்போது அந்த கட்சிக்கு சின்னம் கொடுத்து அங்கீகரித்தவர் டி.என். சேஷன். மதிமுக பிரிவின் போது திமுக கட்சி சின்னம் முடக்கப்பட்டது. அப்போது அதை காப்பாற்றி உதவி செய்தவர் சேஷன் தான். அதனால் அவருக்கு பெரிதும் நன்றி கடன்பட்டுள்ளோம். எனவே அண்ணா அறிவாலயத்தில் சேஷனுக்கு சிலை வைக்க வேண்டும்’ என்றார். கராத்தே தியாகராஜனின் இந்த கருத்து பரபரப்பைக் கிளப்பியுள்ளது.