தினகரன் கட்சி இன்னும் இருக்கிறதா? தமிழிசை கிண்டல்!
தினகரன் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து போய் கொண்டிருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
சென்னை: தினகரன் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து போய் கொண்டிருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
டிடிவி தினகரன் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் மாற்றுக்கட்சிகளைத் தேடி சென்று கொண்டிருக்கின்றனர். இதனால் தினகரன் அரசியலில் வீழ்ச்சியை சந்தித்துள்ளார் என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைத் தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்தார். அப்போது அவரிடம் பாஜக குறித்து நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் வெளியாகியுள்ள கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘ எம்ஜிஆர் நாளேட்டில் இடம் பெறுவதற்கு எல்லாம் பதில் கூற விரும்பவில்லை. அவர்கள் கட்சி இருக்கிறதா என்பதை முதலில் பார்க்க வேண்டும். தினகரன் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து போய் கொண்டிருக்கிறது’ என்றார்.
தொடர்ந்து காவிரி நதிநீர் ஆணையம் குறித்த பதிலளித்த தமிழிசை, ‘யாராக இருந்தாலும் காவிரி நதிநீர் ஆணையத்தின் கட்டளைப்படி தண்ணீர் திறந்து விட்டுத்தான் ஆக வேண்டும். தமிழக விவசாயிகளுக்குத் தண்ணீர் கிடைக்க வேண்டும். அனைத்து கட்சிகளும் இதற்கு வழிவகை செய்ய வேண்டும்’ என்றார்.