தினகரனுக்கு பரிசு சின்னம்: அ.ம.மு.க ஐ.டி விங்கின் அலப்பறை!
டிடிவி தினகரனின் தேர்தல் சின்னமான பரிசு சின்னத்தைப் பிரபலப்படுத்தும் நோக்குடன் முழுமூச்சில் களமிறங்கியுள்ளனர் அமமுகவினர்.
சென்னை: டி.டி.வி. தினகரனின் தேர்தல் சின்னமான பரிசு சின்னத்தைப் பிரபலப்படுத்தும் நோக்குடன் முழுமூச்சில் களமிறங்கியுள்ளனர் அமமுகவினர்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல்
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை மக்களவை தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பாளர்களை அறிவித்து, வேட்புமனுத் தாக்கல், பிரசாரம் எனத் தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
அடம்பிடித்த டி.டி.வி.
முன்னதாக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரனுக்கு, மக்களவை மற்றும் இடைத் தேர்தலுக்கான சின்னம் அறிவிக்கப்படாமலேயே இருந்தது. எனக்குக் குக்கர் சின்னம் தான் வேண்டுமென்று டெல்லியில் இருக்கும் உச்சநீதிமன்றம் வரை போய் அடம்பிடித்த தினகரனுக்கு, தேர்தல் ஆணையமோ முடியாது என்ற பதிலை ஆணித்தரமாகச் சொல்லி சென்னைக்கு அனுப்பியது.
தினகரனுக்கு பரிசு தந்த தேர்தல் ஆணையம்
இதையடுத்து தினகரனுக்கு பொது சின்னம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்தில் பரிந்துரைக்க, தினகரனுக்கு இன்று காலை பரிசு சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
தினகரனின் அமமுகவுக்குச் சின்னம் ஒதுக்கியது முதலே அதை எப்படியெல்லாம் பிரசாரம் செய்து மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்கலாம் என்ற ஒரே நோக்குடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர் அமமுகவினர்.
அமமுகவினரின் மெனக்கிடல்
அதற்காக அவர்கள் கையாண்டுள்ள நூதன வழிமுறையைப் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். சின்னம் ஏதுவென்று தெரியாமல் இருந்த நிலையில் தங்களுக்கான சின்னம் தெரிந்து விட்டதால், அதை ஓபிஎஸ், மோடி என பல அரசியல் கட்சி தலைவர்கள் கையில் கொடுத்து அழகுபார்த்துள்ளார்கள். அதுவும் ஓபிஎஸ் நியாயம் கேட்டு ஜெ. சமாதியில் அம்மாவின் ஆன்மாவோடு உரையாடிக் கொண்டிருந்த வேளையில் அவருக்கே தெரியாமல், அவர் கையில் கொடுத்து விட்டு சென்றது போல் இருக்கிறது அந்த புகைப்படம். அதற்காக அமமுக தொழில்நுட்ப பிரிவினரின் மெனக்கிடல் இதோ..!
பொதுவாக தேர்தல் சின்னதை அக்கட்சியின் தலைவர்களின் மூலமே பிரசாரம் செய்யும் நபர்களின் மூலமோ பிரபலப்படுத்துவர்.ஆனால் இவர்களோ, எதிர்க்கட்சியினர் கையிலேயே கொடுத்து மிரள வைத்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.
எது எப்படியோ, குக்கர் சின்னம் இருக்கும் போதே டோக்கன் கொடுத்து ஜெயிச்ச எங்க தலைவரு.. கிஃப்ட் பாக்ஸ் கொடுத்த பிறகு சொல்லவா வேணும்…வாரி வழங்குவாருல்ல என்று காலரை தூக்கி கொண்டு செல்கின்றனர் தினகரனின் ஆதரவாளர்கள்.
என்ன கொடுமை சார் இது!….
இதையும் வாசிக்க: டோக்கன் கொடுத்து ஏமாற்றியது போல் பரிசு கொடுத்து ஏமாற்ற முடியாது: டி.டி.வி.யை விமர்சித்த அ.தி.மு.க அமைச்சர்