திடீரென மாரடைப்பு : பாடம் நடத்திக் கொண்டிருந்த போதே உயிரிழந்த ஆசிரியர்!
மதுரையிலிருந்து பள்ளிக்கு வருவது கடினமாக இருந்ததால் இவர் தஞ்சையில் தங்கியிருந்து தினமும் பள்ளிக்கு வருவாராம்.
நாகப்பட்டினம் மாவட்டம் உப்பளஞ்சேரியில் அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராமதாஸ்(57) அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மதுரையிலிருந்து பள்ளிக்கு வருவது கடினமாக இருந்ததால் இவர் தஞ்சையில் தங்கியிருந்து தினமும் பள்ளிக்கு வருவாராம். வழக்கம் போல இன்றும் இவர் பள்ளிக்கு வந்து மாணவர்களுக்குப் பாடம் எடுத்துக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது திடீரென ராமதாஸுக்கு மாரடைப்பு வந்து வகுப்பறையிலேயே மயங்கி விழுந்துள்ளார். ராமதாஸ் மயக்கமடைந்ததைக் கண்டு பதறிப்போன மாணவர்கள், வேறு வகுப்பறையிலிருந்த ஆசிரியர்களை அங்கு வரவழைத்துள்ளனர். உடனே, அங்கு சென்ற ஆசிரியர்கள் அவரை திருத்துறைப்பூண்டி என்னும் இடத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவரை, பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து, ஆசிரியர்கள் ராமதாஸின் குடும்பத்திற்குத் தகவல் அளித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.