திடீரென ட்விட்டர் கணக்கு துவக்கிய அஜீத் ‘மகள்’!
விஸ்வாசம் படத்தில் அஜீத்தின் மகளாக நடித்து ஓவர்நைட்டில் பிரபலமான அனிகா சுரேந்திரன் ட்விட்டரில் தனக்கென ஒரு கணக்கைத் தொடங்கியுள்ளார்
சென்னை: ‘விஸ்வாசம்’ படத்தில் அஜீத்தின் மகளாக நடித்து ஓவர்நைட்டில் பிரபலமான அனிகா சுரேந்திரன் ட்விட்டரில் தனக்கென ஒரு கணக்கைத் தொடங்கியுள்ளார்.
அதில் முதல் செய்தியாக ‘விஸ்வாசம்’ படத்தில் தனக்கு பேராதரவு தந்த தமிழ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
2010ல் ‘கதை தொடருன்னு’ என்ற மலையாளப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா, 2015ல் கவுதம் மேனனும் அஜீத்தும் இணைந்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் அஜீத் மகளாகவே அறிமுகமானார். அடுத்து சில மலையாளப் படங்கள் மற்றும் சில தமிழ்ப்படங்களில் நடித்திருந்தாலும் ‘விஸ்வாசம்’ மூலம் புகழின் உச்சிக்கே போய்விட்டார் அனிகா.
படத்தில் அஜீத், நயன்தாரா ஆகிய இருவரையும் தனது அட்டகாசமான நடிப்பால் அனிகா தூக்கிச் சாப்பிட்டுவிட்டார், குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சியில் அடக்கமுடியாமல் அழுதுவிட்டோம்’ என்றே மக்கள் புகழ்ந்துவரும் நிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அது குறித்து பதிலளித்த அனிகா’ அந்தக் காட்சியில் நடித்தபோது நானும் அஜீத் அங்கிளும் உண்மையாகவே நெகிழ்ந்து உணர்ச்சி வசப்பட்டு அழுகவே செய்தோம். நான் நன்றாக நடிக்கவேண்டுமென்பதற்காக அங்கிள் என்னை மிகவும் மோடிவேட் செய்தார்’ என்று பகிர்ந்திருக்கிறார்.