தாயை துடைப்பத்தால் அடித்து மிரட்டிய 17 வயது இளைஞர்: அதிர வைக்கும் சம்பவம்; வைரலாகும் வீடியோ!

 

தாயை துடைப்பத்தால் அடித்து மிரட்டிய  17 வயது இளைஞர்: அதிர வைக்கும் சம்பவம்; வைரலாகும் வீடியோ!

பெற்ற தாயையே மகன் ஒருவன்  இரக்கமில்லாமல், துடைப்பத்தால் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

பெங்களூரு: பெற்ற தாயையே மகன் ஒருவன் இரக்கமில்லாமல், துடைப்பத்தால் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தனியார் கல்லூரி ஒன்றில் பயிலும் 17 வயது இளைஞர் மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார். மகனின் இந்தச் செயலை கண்டு வேதனையடைந்த தாய் இது குறித்து அக்கம்பக்கத்தினரிடம் கூறி கவலைப்பட்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல் மகன்  காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்து வைக்க  மறுப்பு தெரிவித்ததோடு, மகனை பற்றி அவரது காதலி வீட்டாரிடமும் கூறியதாக தெரிகிறது. இது குறித்து தெரிந்து கொண்ட அந்த இளைஞர் தன்னைப் பற்றி காதலி வீட்டாரிடமும் ,அக்கம் பக்கத்தினரிடம் கூறி தன் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தி விட்டதாக நினைத்து தன் அம்மாவை துடைப்பத்தால் அடிக்கிறார். மேலும் தன்னைப் பற்றி எல்லாரிடமும் கூறுவதை தவிர்க்கச் சொல்லி மிரட்டுகிறார். இந்தச் சம்பவம் குறித்த வீடியோ பதிவானது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது.

இந்தச் சம்பவத்தை வீடியோவாக அந்த இளைஞனின் அக்காவே படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சூ-மோட்டோ கேஸ் எனப்படும் முறையில், காவல்துறை புகார்களின் பேரில் அல்லாமல், தாங்களாகவே முன்வந்து பெண்ணின் மாண்புக்கு பங்கம் விளைவிப்பது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 509, வேண்டுமென்றே காயம் செய்வது இபிகோ 324 ஆகியனவற்றின் கீழும், COPTA (Cigarettes and Other Tobacco Products Act) சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்தது.

இந்நிலையில் போலீஸார் அந்த இளைஞரின் வீட்டுக்குச் சென்றனர். ஆனால், அந்த இளைஞனின் தாய் எந்த புகாரும் தெரிவிக்க மறுத்துவிட்டார். இதனால், அந்த இளைஞரை எச்சரித்த போலீஸார் இது போன்று மீண்டும் நடக்கமாட்டேன் என உறுதிமொழி அளிக்கச் சொல்லி எழுதி வாங்கிச் சென்றது குறிப்பிடத்தக்கது.