தலைமறைவானாரா வடிவேலு? திரையுலகில் பரபரப்பு!
எலி படத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு நாயகனாக நடித்திருந்த நடிகர் வடிவேலு, அதன் பிறகு கத்தி சண்ட, சிவலிங்கா, மெர்சல் படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இதற்கிடையே சிம்புதேவன் இயக்கும், இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தில் அவர் நடிக்க இருந்தார். இயக்குநர் ஷங்கரும் லைகா புரொடக்ஷனும் இணைந்து தயாரிக்க இருந்த இந்தப் படத்துக்காகப் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், சில பிரச்னைகள் காரணமாக வடிவேலு இந்தப் படத்தில் நடிக்காமல் இழுத்தடித்தாராம்.
இந்த விவகாரம் தயாரிப்பாளர் சங்கம் வரை செல்லவே இன்றுவரை தமிழ் சினிமாவில் தீர்க்கமுடியாத பஞ்சாயத்தாக மாறியிருக்கிறது வடிவேலு நடித்து பாதியில் நிற்கும் ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ விவகாரம். இதனால் வடிவேலு வேறு எந்த படத்திலும் நடிக்காமலிருந்து வந்தார். இந்நிலையில் பல்வேறு சர்ச்சைக்கு பிறகு தற்போது கமல்ஹாசன் படத்தில் நடித்துவருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் வடிவேலுவின் உதவியாளர் மணிகண்டன் மீது வடிவேலு நடித்த எலி படத்தின் தயாரிப்பாளர் சதீஷ் என்பவர் மதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதில் தான் சென்னை சென்றிருந்த போது வடிவேலுவின் உதவியாளர் மணிகண்டன் தன் வீட்டில் புகுந்து ரகளை செய்ததாகவும், தன்னுடைய மேலாளர் கோவிந்தராஜை தாக்கியதாகவும் கூறியுள்ளார். மேலும் இதற்கான சிசிடிவி ஆதாரத்தையும் சதீஷ் காவல்துறையினரிடம் கொடுத்தார். சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில் தாக்குதல் மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து மணிகண்டன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடி வருகி்ன்றனர். இந்த வழக்கு காரணமாக வடிவேலு தலைமறைவானதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து வடிவேலுவை தொடர்புகொண்டு கேட்டபோது, இது முற்றிலும் பொய். கடந்த செவ்வாய்க்கிழமை கூட குலதெய்வக் கோயிலுக்கு சென்று வந்தேன். நான் எங்கும் தலைமறைவாகவில்லை. நான் மீண்டும் திரைபடங்களில் நடிக்கவுள்ளதால் விரோதத்தில் சிலர் இதுபோன்ற பொய்யான தகவல்களை அவதூறு பரப்பிவருகின்றனர். படத் தயாரிப்பாளர் சதீஷ்குமாரும் சிலரது துாண்டுதலின் பேரில் தன் மீதும், மணிகண்டன் மீதும் அவதுாறு பரப்பி வருகிறார்” எனக்கூறினார்.