தயங்காமல் கேள்வி கேளுங்கள்!

 

தயங்காமல் கேள்வி கேளுங்கள்!

நீண்ட  நாள்களாக நண்பர் ஒருவருக்கு தரமான, மூக்கு கண்ணாடி வாங்க வேண்டும் என்கிற ஆசை. நாலாயிரம் ரூபாய் கொடுத்து அந்த மூக்குக் கண்ணாடியை வாங்கி இருந்தார். அவருடைய வருமானத்துக்கு இது அதிகம் என்றாலும், தரமாக வாங்க வேண்டும் என்ற ஆசையால் அப்படி வாங்கி விட்டார். அதைப் பெருமையுடன் அணிந்தும் கொண்டார். ஒருநாள் காலை எழுந்து முகம் கழுவி விட்டு கண்ணாடி அணியும் போது தான், கண்ணாடியின் ஃபிரேம் ஓரத்தில் மிகச் சிறியதாக கீறல் இருப்பதைக் கவனித்தார். சட்டென்று கண்ணுக்குத் தெரியவில்லை என்றாலும் அது கீறல் தான். வாங்கும் போதே அது இருந்திருக்கிறது.
கடைக்காரர் தன்னை ஏமாற்றி விட்டதாக மனைவியிடம் புலம்பினார். ‘‘போய் மாற்றி விட்டு வாருங்கள்’’ என்று மனைவி சொன்ன போது, ‘‘இருக்கட்டும், அது சின்னக் கீறல் தானே! யாருக்கும் தெரியாது. இதை எல்லாம் போய்க் காட்டி புதுக்கண்ணாடி கேட்டால் அவர்கள் தருவார்களோ என்னவோ’ என்று திருப்பிக் கேட்க கூச்சமும் வெட்கமும் அடைந்தார். காலை உணவைக் கூட அருந்தாமல் மனதிற்குள் புலம்பிய படியே இருந்தார்.

அதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு அந்த வீட்டில் ஒரு சம்பவம் நடந்தது. அவருடைய ஏழு வயது மகள் தீக்குச்சியை வைத்துப் பள்ளிக் கூட புராஜெக்ட் ஒன்றைச் செய்து கொண்டிருந்தாள். தீக்குச்சிகளை பசையில் தடவி, சார்ட் பேப்பரில் ஒட்டி ஒட்டி கலைப்பொருட்கள் செய்தாள். முதுகு வலிக்கவே அப்படியே தரையில் படுத்துக் கொண்டாள். அப்போது அவள் கையில் தீப்பெட்டி இருந்தது. அதை எடுத்து, தீப்பெட்டியில் என்ன எழுதி இருக்கிறது என்று வாசித்துக் கொண்டிருந்தாள்.
அதில், ‘இந்தப் பெட்டியில் 40 தீக்குச்சிகள் இருக்கும்’ என்று எழுதி இருந்தது. சட்டென்று எழுந்து அமர்ந்தாள். ஒரு புதுத் தீப்பெட்டியை உடைத்து, உள்ளே இருக்கும் குச்சிகளை எண்ணிப் பார்த்தாள். 33 குச்சிகள் தான் இருந்தன.

இன்னொரு பெட்டியை உடைத்து எண்ணினாள். அதில் 36 மட்டுமே இருந்தன. இப்படிப் பத்து தீப்பெட்டிகளை உடைத்து உடைத்து எண்ணிப் பார்த்தாள். எதிலுமே அட்டையில் குறிப்பிட்டிருந்தபடி 40 குச்சிகளோ அல்லது அதற்கு அதிகமாகவோ இல்லை. இதைப் பார்த்த சிறுமிக்கு நிறைய கேள்விகள் வந்தன. தீப்பெட்டி நிறுவனத்தின் தொலைபேசி எண் அட்டையில் இருந்தது. அதற்கு அம்மாவின் போனிலிருந்து அழைத்துப் பார்த்தாள். அங்கே யாரும் எடுக்கவில்லை. தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தாள். அப்போதும் யாரும் எடுக்கவில்லை.
வீட்டின் புத்தக அலமாரியில் ஒரு அஞ்சல் அட்டை இருப்பதைப் பார்த்தாள். தீக்குச்சி குறைவாக இருப்பதைக் குறிப்பிட்டு அதில் எழுதி, கம்பெனியின் முகவரி எழுதி வீட்டுக்கு அருகே உள்ள தபால் பெட்டியில் சேர்த்தாள்.
அதிலிருந்து நான்காம் நாள் தான் அவள் அப்பாவின் கண்ணாடியில் கீறல் இருக்கிறது என்று கவலையாய் அமர்ந்திருக்கிறார். அப்போது தபால்காரர் தபால் கொடுத்து விட்டுச் சென்றார். தன் மகள் பெயரைக் கொண்ட தபால் உறை இது. ‘ஏழு வயது சிறுமிக்குத் தபால் எல்லாம் வருகிறதே’ என்று வியந்து பிரித்தார். அது தீப்பெட்டி கம்பெனியிலிருந்து வந்த கடிதம்.
அன்புக்குரிய பள்ளி மாணவிக்கு,
ஆம், எங்கள் தவறை உணர்ந்தோம். எந்தப் பெட்டியிலும் 40 குச்சிகள் இல்லை.
அட்டைப் பெட்டியில் ‘தோராயமாக 40 குச்சிகள்’ என்றாவது எழுதி இருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் 40 குச்சிகள் இருப்பதை உறுதி செய்திருக்க வேண்டும். நிச்சயமாக இது தவறு தான். நீங்கள் குறிப்பிட்ட மாதிரி, ‘வாடிக்கையாளர் கவனிக்கவில்லை என்பதாலேயே இப்படி சிறு விஷயத்தில் உற்பத்தி செய்பவர் தவறு செய்ய வேண்டும் என்பதில்லை. எங்கள் மன்னிப்பை உங்களிடம் கோருகிறோம். இச்செய்தியை பகிரங்கமாக பத்திரிகையில் கொடுத்தும் மன்னிப்பு கேட்க உள்ளோம்.
நன்றி. இப்படிக்கு, மேனேஜர்’

இதைப் பார்த்ததும் அப்பாவுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. ‘நம் ஏழு வயது மகள் தைரியமாக நுகர்வோர் உரிமைக்காக போராடி இருக்கிறார். ஆனால் இவ்வளவு பெரிய பொறுப்பில் உள்ள நான் என் கண்ணாடிக் கீறலைக் கேட்கக் கூச்சப்பட்டு இங்கே இருக்கிறேனே’ என்று தன்னைத் தானே கடிந்து கொண்டார்.
உடனே கண்ணாடி கடைக்குப் போனார். அங்கே தன் தன் கண்ணாடிக் கீறலைக் காட்டி, ‘‘வாடிக்கையாளர் கவனிக்கவில்லை என்பதாலேயே இப்படி சிறு விஷயத்தில் கவனக்குறைவாக இருக்கக் கூடாது’’ என்று சொன்னார்.அவர்கள் மன்னிப்பு கேட்டு, அடுத்த இரண்டு மணி நேரத்தில் வேறு நல்ல கண்ணாடி மாற்றிக் கொடுத்தார்கள். உற்சாகமாக வீடு வந்தார்.