தமிழக இளைஞர்கள் மத்தியில் ஓட்டு போடும் ஆர்வம் அதிகரிப்பு..!

 

தமிழக இளைஞர்கள் மத்தியில் ஓட்டு போடும் ஆர்வம் அதிகரிப்பு..!

தமிழக இளைஞர்கள் மத்தியில் ஓட்டு போடும் ஆர்வம் அதிகரித்துள்ளதாக கருத்து கேட்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது

சென்னை: தமிழக இளைஞர்கள் மத்தியில் ஓட்டு போடும் ஆர்வம் அதிகரித்துள்ளதாக கருத்து கேட்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தமிழகத்தை பொறுத்தவரை காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது.

இதையடுத்து, தேர்தலுக்கான பணிகளை தொடங்கி தேர்தல் ஆணையம் முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது. வாக்காளர்களிடம் ஓட்டு போடும் ஆர்வத்தை தூண்டும் வகையில் பல்வேறு விதமான விழிப்புணர்வுகளையும், பிரசாரங்களையும் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, சமூக வலைத்தளங்களில் மீம்ஸ், வீடியோக்கள் போன்றவற்றை அதிகமாக வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய தேர்தல் ஆணையம் இம்முறை பிரசாரனகழி மேற்கொள்ளவுள்ளது. வாக்காளர்கள் ஓட்டு போடும் அவசியத்தை வற்புறுத்தும் வகையில் ரஜினிகாந்த உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் வேண்டுகோள் விடுக்கும் விழிப்புணர்வு வாசகங்களையும் வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

முன்னதாக, ஜனவரி மாதம் 31-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் ஆட்கள் சேர்க்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில், 18 வயதில் இருந்து 19 வயதுடைய முதல் முறை வாக்காளர்கள் 8 லட்சத்து 98 ஆயிரம் பேர் இடம்பெற்றுள்ளனர். மேலும், தேர்தலுக்கு முன்பாக வாக்காளர் சேர்க்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இளைஞர்களின் ஓட்டு போடும் ஆர்வம் எப்படி இருக்கிறது? என்பது குறித்து டிவிட்டரில்  ‘பவர் ஆப் 18’ என்ற பெயரில் கருத்து கேட்கப்பட்டது. அதில், 98 சதவீதம் பேர் ஓட்டு போடுவோம் என்று கூறி உள்ளனர்.