தமிழக அரசே வெளிப்படை தன்மையுடன் மக்களை மீட்டெடு: இயக்குநர் பா.ரஞ்சித் கோரிக்கை!

 

தமிழக அரசே வெளிப்படை தன்மையுடன் மக்களை மீட்டெடு: இயக்குநர் பா.ரஞ்சித் கோரிக்கை!

சென்னை : கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களை போர்க்கால நடவடிக்கையின் படி வெளிப்படைத் தன்மையுடன் உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் இயக்குநர் பா.ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.

கஜா புயல் கரையை கடந்து டெல்டா மாவட்டங்களை நிலைகுலையச் செய்துள்ளது. அங்கு உணவு, தண்ணீர், மின்சாரம், வீடு என அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். சோறுடைத்த சோழ நாடு என போற்றப்பட்ட டெல்டா மாவட்டங்கள் தற்போது சோற்றுக்கு வழி இல்லாமல் இருக்கிறது. இதனையடுத்து தன்னார்வலர்கள் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர்.

ஆனால் அரசு தரப்பில் இருந்து எந்தவித நிவாரண உதவியும் வழங்கவில்லை எனவும், அரசு அதிகாரிகள் எட்டிக்கூட பார்க்கவில்லை எனவும் டெல்டா மாவட்ட மக்கள் குற்றம்சாட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். 

 

இந்நிலையில் இது குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘கஜா புயலால் பாதிப்புகள் என்று நமக்கு காட்டப்படும் செய்திகளை விட, மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக, உண்மை செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழக அரசே போர்க்கால நடவடிக்கையின் படி வெளிப்படைத் தன்மையுடன் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடு& மீட்டெடுப்போம்!’ என்று பதிவிட்டுள்ளார்.