தன்மானம் தான் முக்கியம்: கைவிட்ட லாரன்ஸ்; வேறு இயக்குநரை முடிவு செய்த காஞ்சனா படக்குழு!
நடிகர் ராகவா லாரன்ஸ் காஞ்சனா இந்தி ரீமேக்கில் இருந்து விலகியதை அடுத்து வேறு இயக்குநரை வைத்து திரைப்படத்தை இயக்க தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
நடிகர் ராகவா லாரன்ஸ் காஞ்சனா இந்தி ரீமேக்கில் இருந்து விலகியதை அடுத்து வேறு இயக்குநரை வைத்து திரைப்படத்தை இயக்க தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான முனி படத்தின் இரண்டாம் பாகமான காஞ்சனா திரைப்படம் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதை தொடர்ந்து தற்போது வரை காஞ்சனா 2, 3 பாகங்கள் வெளியாகியுள்ளது. காஞ்சனாவின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தை ஹிந்தியில் எடுக்க முடிவெடுத்தார் ராகவா லாரன்ஸ். அக்ஷய் குமாரை வைத்து இயக்கவிருந்த இந்த படத்திற்கு லக்ஷ்மி பாம் என்று பெயரிடப்பட்டிருந்தது.
இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சனா ஹிந்தி ரீமேக்கின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இது குறித்து கருத்து தெரிவித்த லாரன்ஸ், ‘ என்னுடைய அனுமதி இல்லாமல் நேற்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது வேறொருவர் சொல்லி தான் எனக்கு தெரிந்தது. ஒரு இயக்குநருக்கு தெரியாமல் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருப்பது வேதனையை அளிக்கிறது. நான் நினைத்தால் இந்த படத்தை எடுக்கவிட முடியாமல் செய்ய முடியும் ஆனால் நான் அப்படி செய்ய மாட்டேன். அக்ஷய் குமார் மீது மரியாதை வைத்திருக்கிறேன். அதனால் இப்படத்தின் கதையை அவரிடம் தருகிறேன். அவர் வேறு யாரையாவது வைத்து எடுத்துக்கொள்ளலாம். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்’ என்று அறிவித்தார்.லாரன்ஸின் இந்த முடிவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மும்பையில் படத்தின் தயாரிப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். சுமார் இரண்டு மணி நேர நடந்த இந்த கூட்டத்திற்கு பிறகு, வேறு இயக்குநரை வைத்து படத்தை முடிக்க முடிவு செய்தனர்.அக்ஷய் குமார் சுமார் 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதால், இரண்டாம் கட்ட படப்பிடிப்பை 40 நாட்கள் நடத்த படக்குழு முடிவெடுத்துள்ளது. இயக்குநர் யார் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.