தனியார் நிறுவனங்களில் பால் விலை உயர்வு.. 20 ஆம் தேதி முதல் அமல் !
ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் விற்கப்பட்டு வரும் பால் விற்பனையில் 84% தனியார் நிறுவனங்களும் 16 % சதவீதம் அரசின் ஆவின் பால் நிறுவனமும் ஈடுபட்டு வருகிறது.
ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் விற்கப்பட்டு வரும் பால் விற்பனையில் 84% தனியார் நிறுவனங்களும் 16 % சதவீதம் அரசின் ஆவின் பால் நிறுவனமும் ஈடுபட்டு வருகிறது. பெருமளவு பால் விற்பனையைத் தனியார் நிறுவனங்கள் தான் நடத்துகின்றன. கடந்த ஆண்டு 3 முறைப் பால் விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில், புதிய ஆண்டு தொடங்கியதாலும், பால் தட்டுப்பாடு காரணமாக விலை கொள்முதல் விலை உயர்ந்துள்ளதாலும், பால் விலையை உயர்த்தி தனியார் நிறுவனங்கள் மொத்த விற்பனையாளர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
ஆரோக்யா, டோட்லா, ஹெரிட்டேஜ் போன்ற பால் நிறுவனங்கள் நாளை மறுநாள் (20 ஆம் தேதி) முதல் லிட்டருக்கு ரூ.4 முதல் 6 வரைபால், தயிர் விலையை உயர்த்துகின்றன. திடீரென பால் விலை உயர்த்தப்படுவதால் உணவகங்களிலும், டீ கடைகளிலும் விலை உயருமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தனியார் பால் விலை உயர்ந்தால் ஆவின் பாலுக்குக் கிராக்கி ஏற்படும். தற்போது விற்கப்படும் விலையை ஒப்பிட்டுப் பார்த்தால் ஆவின் பாலை விட, தனியார் பால் பாக்கெட்டுகள் ரூ.5 முதல் 10 வரை கூடுதலாகவே விற்கப்படுகின்றன.
இது குறித்துப் பேசிய தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்க மாநில தலைவர் பொன்னுசாமி, தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்த அனுமதிக்கக் கூடாது. அரசின் அனுமதியுடனே பால் விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வரும் படி தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். ஆண்டுக்கு 3 முறை விலை உயர்த்தப் படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். மக்களின் அத்தியாவசிய தேவையான பால் விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.