தந்தை இறந்து போனதை மறைத்து மகளுக்கு திருமணம் செய்து வைத்த உறவினர்கள்: திருமண விழாவில் நடந்த சோகம்!
மகளின் திருமண விழாவில் பாட்டு படி கொண்டிருந்த தந்தை திடீரென இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா: மகளின் திருமண விழாவில் பாட்டுப் பாடிக்கொண்டிருந்த தந்தை திடீரென இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த விஷ்ணுபிரசாத் திருவனந்தபுரம் அருகே உள்ள கரமனை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவரது 3 பிள்ளைகளில் 2 பேருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இதனால் இவரது இளைய மகளான ஆர்ச்சாவுக்கும் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் செய்ய முடிவு எடுத்தனர்.
இதையடுத்து திருமண தேதி குறிக்கப்பட்ட முதல்நாள் திருமண நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது இசை கச்சேரிக்கு விஷ்ணுபிரசாத் ஏற்பாடு செய்திருந்தார். அப்போது அவரது நண்பர்கள் அவரைப் பாடுமாறு கூறினர். கடைசி மகள் திருமணம் என்பதால் உற்சாகமாக இருந்த அவர் மேடையில் பாடல் பாடத் தொடங்கினார். அவர் பாடிக்கொண்டிருந்த சில நிமிடங்களில் மேடையிலேயே சரிந்து விழுந்தார்.இதனால் அங்கிருந்தவர்கள் பதறினர். தந்தைக்கு ஏதோ ஆகிவிட்டது என்று மகள் ஆர்ச்சா கதறி அழுதார்.
இதைத் தொடர்ந்து அவரை சமாதானம் செய்த உறவினர்கள், விஷ்ணுபிரசத்தை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், தந்தை இறந்தது தெரிந்தால் ஆர்ச்சா திருமணம் தடைபடும். ஆசையாய் ஆசையாய் அவர் தந்தை ஏற்பாடு செய்த திருமணம் நின்று போக கூடாது என்று நினைத்து, விஷ்ணுபிரசாத் இறந்ததை மகள் ஆர்ச்சாவிடம் மறைத்துள்ளனர்.மாறாக தந்தை நலமுடன் இருக்கிறார், காலையில் திருமணத்திற்கு வந்துவிடுவார் என்று கூறி சமாதானம் செய்துள்ளனர்.
இருப்பினும் ஆர்ச்சா கழுத்தில் தாலி ஏறும் வரை தந்தை விஷ்ணு பிரசாத் வராததால் ஆர்ச்சா தந்தையை எங்கே என்று கேட்டுள்ளார். திருமணமான பிறகே விஷ்ணுபிரசாத் இறந்துவிட்டதாக மகள் ஆர்ச்சாவிடம் உறவினர்கள் கூறியுள்ளனர். இதை கேட்ட ஆர்ச்சா கதறி அழுதது காண்போர் நெஞ்சை கலங்கச் செய்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.