டிவியில் சத்தமாக ஓடிய பாட்டு: மனைவியை கத்தியால் குத்திய கணவன்; அதிர்ச்சி தரும் சம்பவம்!
டிவியில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்ட கணவரை மனைவி திட்டியதால் கோபமடைந்த கணவர் மனைவியை கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார்.
சென்னை: டிவியில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்ட கணவரை மனைவி திட்டியதால் கோபமடைந்த கணவர் மனைவியை கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணி அயோத்தி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் வீரன்.இவரது மனைவி உஷா. வீரன் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த வியாழன் இரவு கடலுக்குச் சென்று விட்டு மதுபோதையில் வீடு திரும்பியதாகக் கூறப்படுகிறது. அப்போது, அவரது மனைவி உஷா ஜெபம் செய்து கொண்டு இருந்துள்ளார். அந்த நேரத்தில் வீரன் டிவியில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் உஷா கணவரைத் திட்டியுள்ளார்.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த வீரன் வீட்டிலிருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து மனைவி உஷாவின் கை மற்றும் மார்பு பகுதியில் குத்தியுள்ளார். வலியால் உஷா கூச்சலிடக் கணவர் வீரன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இந்நிலையில் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த உஷாவை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இவ்விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த மெரினா போலீசார் வீரனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.