டிராஃபிக் போலீஸ் கழுத்தை கடித்த டாடா ஏசி டிரைவர்: ராமநாதபுரத்தில் பரபரப்பு!?
போக்குவரத்து காவல் ஆய்வாளரும், தனியார் வாகன ஓட்டுநரும் சாலையில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம்: போக்குவரத்து காவல் ஆய்வாளரும், தனியார் வாகன ஓட்டுநரும் சாலையில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் பஜார் பகுதியில் விஜயகாந்த் என்ற போக்குவரத்து காவலர் ஒருவர் பணியிலிருந்துள்ளார். அப்போது போக்குவரத்தைச் சீர்செய்யும் போது, அந்த சாலையில் டாடா ஏசி ஒன்று வந்துள்ளது. அதை நிறுத்துமாறு விஜயகாந்த் கைகாட்டியும் ஓட்டுநர் நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர், அவ்வாகனத்தை விரட்டிப்பிடித்ததுடன் ஓட்டுநர் கர்ணனை கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பதிலுக்கு ஆத்திரமடைந்த கர்ணன் காவல் ஆய்வாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இவர்களுக்கிடையே சண்டை முற்றிய நிலையில், இருவரும் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டையிட்டுள்ளார்.
இந்த சண்டையில் காவல் ஆய்வாளர் விஜயகாந்தின் கழுத்தில், கர்ணன் பலமாக கடித்துள்ளார். இதனால் அவர் காயமடைந்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த சகா காவலர்கள் ஓட்டுநர் கர்ணனை மடக்கிப்பிடித்தனர். இதை தொடர்ந்து மூன்று பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், கழுத்தில் காயமடைந்த ஆய்வாளர் விஜயகாந்த்தை மருத்துவமனையில் அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.