ஜெயலலிதா மரணத்திற்கு திமுகவே காரணம்: தம்பிதுரை பகீர் தகவல்!
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உயிரிழந்ததற்கு திமுகவே காரணம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உயிரிழந்ததற்கு திமுகவே காரணம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
1991-96 தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த காலத்தில் டான்சி ஊழல், கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்தல் உள்ளிட்ட பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக அடுத்து ஆட்சி அமைத்த திமுக, ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்தது.
திமுக தொடர்ந்த அந்த வழக்குகளால், ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியது. ஒரு கட்டத்தில் முதல்வராகப் பொறுப்பேற்க முடியாமல், ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார் ஜெ.
ஜெயலலிதாவின் இறுதி மூச்சுவரை அவரை பின் தொடர்ந்த சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூரு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் முதல்வர் பதவியை இழந்த ஜெ., சிறைவாசம் அனுபவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அந்த வழக்கின் தீர்ப்பு குளறுபடியாகியதையடுத்து, அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின், ஜெ. உயிரிழந்த பிறகே அந்த வழக்கின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு, இன்றும் சசிகலா சிறையில் இருக்கிறார்.
இந்நிலையில், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை, திமுக வழக்கு தொடர்ந்ததால் மன உளைச்சல் ஏற்பட்டதன் காரணமாகவே ஜெயலலிதா உயிரிழந்தார் என புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார்.