‘ ஜில்ஜில் ரமாமணி’ ஆச்சி மனோரமாவின் நினைவு தினம் இன்று!
சினிமா என்றாலே ஆண்களுக்கான தளம். நகைச்சுவை என்றால் ஆண்கள் மட்டுமே கோலோச்ச முடியும் என்ற பிம்பத்தை உடைத்தெறிந்தவர் மறைந்த பழம்பெரும் நடிகை ஆச்சி மனோரமா
4 தலைமுறை நடிகர்கள், 5 முதல்வர்களுடன் நடித்து திரையுலகிற்குப் பெருமை சேர்த்த ஆச்சி மனோரமா மறைந்த தினம் இன்று.
சினிமா என்றாலே ஆண்களுக்கான தளம். நகைச்சுவை என்றால் ஆண்கள் மட்டுமே கோலோச்ச முடியும் என்ற பிம்பத்தை உடைத்தெறிந்தவர் மறைந்த பழம்பெரும் நடிகை ஆச்சி மனோரமா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை புரிந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார்.
குறிப்பாக எம்ஜிஆர் , சிவாஜி காலத்திலிருந்து விஜய் , அஜித், சிம்பு காலம் வரை சுமார் 4 தலைமுறை நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தவர். நடிப்பு மட்டுமல்லாது பாடகியாகவும் தன்னை மக்களுக்கு நிரூபித்து காட்டியவர் மனோரமா.
அதுமட்டுமல்லாது தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோருடன் நாடக மேடைகளிலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடன் தமிழ் படங்களிலும் என்.டி.ராமாராவுடன் தெலுங்கு படங்களிலும் நடித்து ஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமை பெற்ற ஒரே நடிகை நம்ம ஆச்சி தான்.
விருதுகளும், மரியாதைகளும்
தமிழ் நாடு அரசின் ‘கலைமாமணி விருது’.
1988 – ‘புதிய பாதை’ திரைப்படத்திற்காகச் சிறந்த துணை நடிகைக்கான ‘தேசிய விருது’.
2002 – மத்திய அரசால் ‘பத்ம ஸ்ரீ விருது’.
1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக ‘கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில்’ இடம்பெற்றுள்ளார்.
மலேசிய அரசிடம் இருந்து’ டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது’.
கேரளா அரசின் ‘கலா சாகர் விருது’.
‘சினிமா எக்ஸ்பிரஸ் விருது’.
தமிழக அரசின் சிறந்த குணச்சித்திர நடிகைக்காக ‘அண்ணா விருது’, ‘என்.எஸ்.கே விருது’, ‘எம்.ஜி.ஆர். விருது’, ‘ஜெயலலிதா விருது’ எனப் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்தவர்.
இவ்வாறு இந்திய திரையுலகில் பல்வேறு சாதனைகளைப் புரிந்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்த ஆச்சி மனோரமா கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதியன்று இயற்கை எய்திய நாள் இன்று.
50 ஆண்டுகளாக திரைத்துறையில் நீடித்த ஆச்சி மனோரமாவின் கடைசி ஆசை கூட கடைசி வரை நடித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பது தான்… இறுதிவரை நடிக்கமுடியாவிட்டாலும், தான் நேசித்த கலையை இறுதிவரை சுவாசித்துக் கொண்டே தனக்கென தனி முத்திரை பதித்து சென்றுவிட்டார் அந்த ‘ஜில் ஜில் ரமாமணி’.