ஜட்டியோடு உட்கார வைத்தார்கள்; செய்தியாளர்களிடம் கதறிய பவர் ஸ்டார் சீனிவாசன்

 

ஜட்டியோடு உட்கார வைத்தார்கள்; செய்தியாளர்களிடம் கதறிய பவர் ஸ்டார் சீனிவாசன்

ஊட்டியில் கடத்தல்காரர்கள் தன்னை ஜட்டியோடு உட்கார வைத்து கொடுமைப் படுத்தியதாக பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை: ஊட்டியில் கடத்தல்காரர்கள் தன்னை ஜட்டியோடு உட்கார வைத்து கொடுமைப் படுத்தியதாக பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கடத்தப்பட்டதாகவும், அவரை விடுவிக்க 10 லட்சம் பணம் வேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகின. தமிழ் சினிமா உலகின் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். 

அப்போது, “ஆறு ஆண்டுகளுக்கு முன், பெங்களூருவைச் சேர்ந்த ஆலமிடம் ரூ.1.25 கோடி வாங்கினேன். அந்தப் பணத்தில் 35 லட்ச ரூபாய் திரும்பக் கொடுத்துவிட்டேன். மீதமுள்ள ரூ.90 லட்சத்தை திரும்பக் கொடுக்கப்பதாகக் கூறியிருந்தேன். அதுதொடர்பான வழக்கு, பெங்களூரு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.  

இந்தச் சமயத்தில்தான், பிரித்தி என்ற சினிமா பி.ஆர்.ஓ என்னிடம் சினிமா வாய்ப்பு இருப்பதாக போனில் பேசினார். அதை நம்பி, கோயம்பேடு பஸ் நிலையம் எதிரில் உள்ள ஹோட்டலுக்கு சென்றபோது, அங்கு பதுங்கியிருந்த சிலர் என்னை திடீரென தாக்கத் தொடங்கினர்.

power star

என்னுடைய பேன்ட், சட்டை மற்றும் இரண்டு செல்போன்களைப் பறித்தனர். ஜட்டியோடு உட்கார வைத்து சித்ரவதை செய்தனர். அன்றைக்கு முழுக்க எனக்கு சாப்பாடு தரவில்லை. பசிக்கிறது என்று கெஞ்சினேன். 6-ந்தேதி ஊட்டிக்கு காரில் அழைத்துச் சென்று ஆலத்திடம் ஒப்படைத்தனர். பின்னர் ஊட்டி ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு குடோனில் என்னை அடைத்து வைத்தனர்.

அப்போதும்கூட எனக்கு சரியாக சாப்பாடு தரவில்லை. என்னை அடைத்து வைத்திருந்தபோது 5 பேர் காவலுக்கு இருந்தனர். அவர்களின் கைகளில் கத்திகள் இருந்தன. தப்பி ஓட முயன்றால் சுட்டுவிடுவோம் என்றும் அவர்கள் மிரட்டினர். 8-ஆம் தேதி என்னைக் கடத்திய தகவல் ஊடகங்களுக்கு தெரிந்துவிட்டது. இதனால் அவர்கள், என்னை விடுவித்தனர். அப்போதுகூட போலீசுக்குப் போனால், உன் குடும்பமே இருக்காது என மிரட்டி அனுப்பிவைத்தனர். ஊட்டியிலிருந்து சென்னைக்கு வந்ததும், நடந்த சம்பவத்தை போலீசாரிடம் கூறினேன்” என விவரித்துள்ளார்.