சீரடி சாயிபாபா கண்டிப்பாக உங்கள் வீட்டுக்கு சாப்பிட வருவார்: எப்படி தெரியுமா?
புண்ணியதலமான சீரடியில் மக்களோடு மக்களாக வாழ்ந்து மறைந்தவர் ஸ்ரீ சாயி பாபா. அவர் வாழ்ந்த காலத்தில் நிகழ்த்திய அற்புதங்கள் எண்ணிலடங்காதவை.
பாபாவின் அற்புதங்கள்
புண்ணியதலமான சீரடியில் மக்களோடு மக்களாக வாழ்ந்து மறைந்தவர் ஸ்ரீ சாயி பாபா. அவர் வாழ்ந்த காலத்தில் நிகழ்த்திய அற்புதங்கள் எண்ணிலடங்காதவை. மக்களின் குறைகளை அறிந்து அவர்களுக்கு ஓடி வந்து உதவுவதில் அந்த மகானுக்கு நிகர் அவர் மட்டும் தான். அதே போல் பாபா தன் பக்தர்களுக்காக நிறைய அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். அப்படி பாபாவின் பக்தை ஒருவரின் வாழ்க்கையில் சாயிநாதர் நிகழ்த்திய அற்புதத்தை இந்த கதையில் காணலாம்.
நம்பிக்கையும், பக்தியும்
பாபாவின் தீவிர பக்தர்களான ஒருபெண்ணும் அவரது மகனும் பாபாவை நினைத்து அனுதினமும் பூஜித்து வந்தனர். குறிப்பாக அவர்கள் பாபாவின் திருவுருவப்படத்துக்கு நைவேத்தியம் செய்ய ஒருநாள் கூட தவறியதே இல்லை. அந்த அளவிற்கு பாபாவின் மீது அவர்களுக்கு நம்பிக்கையும், பக்தியும் இருந்தது.
ஆனால் பெண்ணின் கணவர் தார்க்காட் என்பவருக்குப் பாபா மீது நம்பிக்கை இல்லை.
ஒருநாள் அப்பெண்ணும் அவரது மகனும் பாபாவை தரிசிக்க சீரடி செல்ல வேண்டும் என்று எண்ணினர்.ஆனால் பாபாவிற்கு யார் தினசரி நைவேத்தியம் வைப்பது என்று யோசித்தனர். இதனால் அவரது கணவர் நான் நைவேத்தியம் செய்கிறேன், நீங்கள் புறப்படுங்கள் என்று கூறினார். கணவரின் உறுதியை அடுத்து தாயும் மகனும் சீரடிக்குச் சென்றனர்.
மனைவி மகனிடம் உறுதியளித்ததை போல தார்க்காட் தினமும் தான் காலையில் அலுவலகம் செல்வதற்கு முன்பாக ஏதேனும் பிரசாதம் தயாரிக்கச் சொல்லி, பாபாவுக்கு நைவேத்தியம் செய்துவிட்டுச் செல்வார். மதிய உணவில் பாபாவுக்குப் படைக்கப்பட்ட நைவேத்தியம் பிரசாதமாகப் பரிமாறப்படும்.
ஆனால் ஒருநாள் அவரது கவனக்குறைவால் பாபாவுக்கு நைவேத்தியம் செய்வது தடைப்பட்டுப் போனது. இதனால் மனம் வருந்திய தார்க்காட் அப்போதே சீரடியில் இருந்த தன் மனைவிக்கு நடந்த செய்தியைத் தெரிவித்து, இனிமேல் பாபாவின் நைவேத்திய விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பதாக உறுதி கூறி ஒரு கடிதம் எழுதினார்.
இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்த வேளையில் தார்க்காட்டின் மனைவியும் மகனும் துவாரகாமாயியில் பாபாவின் முன்பாக அமர்ந்துகொண்டிருந்தனர். அப்போது அவர்களைப் பார்த்துச் சிரித்த பாபா, இன்று நான் மிகுந்த பசியுடன் உன் வீட்டிற்கு சென்றிருந்தேன். ஆனால் எனக்கு அங்கு எதுவும் கிடைக்கவில்லை’ என்று கூறினார். பாபாவின் இந்த பேச்சு தார்க்காட்டின் மனைவிக்கு புரியவில்லை. ஆனால் அவரது மகன் சரியாகப் புரிந்து கொண்டு தன் தாயிடம் அப்பா பாபாவுக்கு நைவேத்தியம் செய்யவில்லை என்று கூறினான்.
அன்றைய காலகட்டத்தில், தகவல் தொடர்பு வசதிகள் இல்லாததால், சம்பவம் நடந்த மூன்றாவது நாள் தார்க்காட்டின் கடிதம் சீரடிக்கு வந்து சேர்ந்தது. அப்போது கணவர் நைவேத்தியம் செய்யவில்லை என்று பாபா கூறியது புரிந்தது. இந்த சம்பவத்திலிருந்து தன்னுடைய சித்திரத்திலும் தான் உயிருடன் இருப்பேன் என்பதைச் சாயி பாபா நிரூபித்துவிட்டார்.