சிவாஜி உருவப்படத்திற்கு துணை முதல்வர் மரியாதை

 

சிவாஜி உருவப்படத்திற்கு துணை முதல்வர் மரியாதை

நடிகர் சிவாஜி கணேசனின் 91-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் 91-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழ் திரையுலகில் தவிர்க்கப்பட முடியாத நடிகர் சிவாஜி கணேசனின் 91-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள் என பலர் சிவாஜி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.  மேலும், சிவாஜியின் பிறந்தநாள் அரசு விழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சிவாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் அவரது உருவ படத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், பெஞ்சமின், மாஃபா பாண்டியராஜன் ஆகியோரும் மரியாதை செலுத்தினர். மேலும், சிவாஜியின் மகன் நடிகர் பிரபு மற்றும் நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, சிவாஜி சிலையை மீண்டும் மெரினாவில் வைக்க கோரிக்கை வைக்கப்பட்டால் அதுகுறித்து அரசு பரிசீலிக்கும் என்றார்.