’சில அரசியல்வாதிகள் என் வீட்டை அபகரிக்க முயல்கிறார்கள்’…’சரவணபவன் அண்ணாச்சி’ புகழ் ஜீவஜோதி டிஜிபியிடம் புகார்..
சரவண பவன் அண்ணாச்சி விவகாரத்தில் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் செய்திகளில் இடம்பிடித்து வந்த ஜீவஜோதி, ஒரு பெரிய விளம்பர இடைவெளிக்குப் பிறகு, நேற்று திடீரென்று சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு ஒர் நீண்ட புகார் மனுவுடன் வந்தார்.
சரவண பவன் அண்ணாச்சி விவகாரத்தில் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் செய்திகளில் இடம்பிடித்து வந்த ஜீவஜோதி, ஒரு பெரிய விளம்பர இடைவெளிக்குப் பிறகு, நேற்று திடீரென்று சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு ஒர் நீண்ட புகார் மனுவுடன் வந்தார்.
அந்த மனுவில்“என் கணவர் தண்டபாணியின் தாயாருக்கு சொந்தமான, வேதாரண்யத்தில் உள்ள,75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை அங்குள்ள ஒருவரிடம் கடந்த 19.7.2018-ல் அடமானமாக வைத்து 10 லட்சம் ரூபாய் வாங்கினோம். கடனுக்காக பூர்த்திசெய்யப்படாத இரண்டு செக், வீட்டுப் பத்திரம் ஆகியவற்றைக் கொடுத்தோம். மேற்படி கடன்தொகையைத் திரும்ப கொடுத்துவிட்டு, ஆவணங்களைப் பெறுவதற்காக நானும் என் கணவர் தண்டபாணியும் 8.1.2019-ம் தேதி மாலை 6.45 மணிக்கு சென்று கொடுத்துள்ளோம். பணத்தைப் பெற்றுக்கொண்ட அவர், பத்திரம் ஆவணங்களைத் தேடிப்பார்த்துவிட்டு, மறுநாள் வாங்கிக்கொள்ளும்படி கூறினார்.
அதன்படி நானும் என் கணவரும் சென்று கேட்டபோது, எங்களைத் தகாத வார்த்தைகளால் திட்டினார். என் கணவரைத் தாக்கியதோடு, கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் சம்பந்தப்பட்டவர்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து, நீதிமன்றம்மூலம் உத்தரவு பெற்ற பிறகு, காவல் நிலையத்தில் கடன் கொடுத்தவர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்தச் சமயத்தில், எங்கள்மீது கடன் கொடுத்தவர் தரப்பில் பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், நீதிமன்றத்தில் நாங்கள் முன்ஜாமீன் பெற்றோம். முன்ஜாமீன் உத்தரவில், காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி வேதாரண்யம் காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்றபோது, போலீஸார் ‘இன்ஸ்பெக்டர் இல்லை’ எனக் கூறி எங்களை அலைக்கழித்தனர். இந்த நிலையில், 1.6.2019-ல் போலீஸார் என் வீட்டின் கதவைத் தட்டினர். அப்போது, என் கணவர் வீட்டில் இல்லை. நானும் குழந்தையும் மட்டுமே இருந்தோம். பெண் என்று பாராமல் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, என்னிடம் தண்டபாணியை உடனடியாக இங்கு வரச்சொல் என்று கூறினர். அதன்பிறகு, இந்த வழக்கை சமரசமாக முடித்துக்கொள்ளலாம் என்று கூறினர். கணவர் இல்லாததால் பதில் எதுவும் சொல்லாமல் கதவை பூட்டிக்கொண்டேன். கடன் கொடுத்தவரும் போலீஸாரும் என்னை மிரட்டிய சம்பவத்தை வீட்டிலிருந்தபடியே செல்போனில் வீடியோவாக எடுத்தேன்.
இந்த வழக்கில் வேதாரண்யம் போலீஸார், கடன் கொடுத்தவருக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர். முன்ஜாமீனுக்காக காவல் நிலையத்தில் எங்களை கையெழுத்துபோடவிடாமல் தடுத்து, சிறையில் அடைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில், என் கணவரின் சகோதரியின் மகளான 16 வயது சிறுமியை போலீஸாரும் கடன் கொடுத்தவரும் மிரட்டியுள்ளனர். இந்த மிரட்டலுக்குப் பின்னணியில் சில அரசியல்வாதிகளும் உள்ளனர். இதனால், நாங்கள் மன உளைச்சலுடன் இருக்கிறோம். மேலும், எங்களுக்குரிய பாதுகாப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.