சிறந்த பிரதமர் மோடிதான்… அடித்து கூறும் தமிழிசை சவுந்தரராஜன்; கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்

 

சிறந்த பிரதமர் மோடிதான்… அடித்து கூறும் தமிழிசை சவுந்தரராஜன்; கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்

இந்தியாவின் சிறந்த பிரதமர் மோடிதான் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

திருச்சி: இந்தியாவின் சிறந்த பிரதமர் மோடிதான் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்துள்ளது. கஜா கடந்து சென்ற வழியெல்லாம் தனது ருத்ர தாண்டவ தடயத்தை மிக அழுத்தமாக பதித்து சென்றுள்ளது. ஏறத்தாழ ரூ 10,000 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டு வாழ்வாதாரம் கால் நூற்றாண்டுக்கு பின்னோக்கி சென்றுள்ளது. ஆனால் மத்திய அரசோ முதற்கட்டமாக ரூ 200 கோடியை ஒதுக்கியுள்ளது. மேலும் தமிழக அரசு கேட்ட ரூ 15,000 கோடி நிதியை ஒதுக்குவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை எனவும் பலர் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி பிரதமர் மோடி பாதிக்கப்பட்ட மாவட்டங்களை வந்து பார்வையிடாததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பா.ஜனதா அரசும், தமிழக அரசோடு இணைந்து தொடர்ந்து மக்கள் நல பணியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு ஏதோ மக்கள் நலனுக்கு எதிராக உள்ளது போல இங்கே சிலர் பிரசாரம் செய்கிறார்கள். அனைவரும் களத்தில் இருக்க வேண்டிய நேரம் இது. இந்தியாவில் நரேந்திர மோடி போன்ற சிறந்த பிரதமர் வேறு யாரும் இல்லை என்றார்.

தமிழிசை சவுந்தரராஜன் கூறுவது போல் மோடி சிறந்த பிரதமராக இருந்தால் அவர் ஏன் புயல் பாதித்த மாவட்டங்களுக்கு வந்து பார்வையிட்டு மக்கள் கஷ்டத்தில் பங்கெடுக்கவில்லை. அப்படி மக்கள் பரிதவிப்பில் பங்கெடுக்காத பிரதமர் எந்த வகையில் சிறந்த பிரதமர். பாஜகவுக்கு வேண்டுமானால் மோடி சிறந்த பிரதமராக இருக்கலாம் ஆனால் மக்களை பொறுத்தவரையில் இன்னும் அவர் சிறந்த பிரதமர் என்ற இடத்திற்கு வரவில்லை என சமூக வலைதளவாசிகள் கூறி வருகின்றனர்.