சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து அலோக் வர்மா திடீர் நீக்கம்!!

 

சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து அலோக் வர்மா திடீர் நீக்கம்!!

சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து அலோக் வர்மாவை நீக்கி பிரதமர் தலைமையிலான உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது

புதுதில்லி: சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து அலோக் வர்மாவை நீக்கி பிரதமர் தலைமையிலான உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. அவரது அதிகாரங்களை பறித்ததுடன், சிபிஐ இணை இயக்குனர் நாகேஸ்வர் ராவை தற்காலிக சிபிஐ இயக்குனராகவும் மத்திய அரசு நியமித்தது.

தன்னை கட்டாய விடுப்பில் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது என உத்தரவிட்டது.

இதையடுத்து, புதுதில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் சிபிஐ இயக்குனராக அலோக் வர்மா மீண்டும் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், அலோக் வர்மா மீதான ஊழல் புகாரில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசிக்க, தில்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நியமனக்குழுவின் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் நீதிபதி ஏ.கே.சிக்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில், சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து அலோக் வர்மாவை நீக்க முடிவு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டது.

பிரதமர் தலைமையிலான நியமனக்குழுவின் பரிந்துரையை ஏற்று சிபிஐ இயக்குநர் பொறுப்பில் அலோக் வர்மா நீக்கப்பட்டு, மத்திய தீயணைப்புத்துறை குடிமை பாதுகாப்பு, ஊர்க்காவல்படை இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய இயக்குநர் நியமிக்கப்படும் வரை சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் தொடருவார். அலோக் வர்மா பணியிடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து சிபிஐ இயக்குநர் பொறுப்பை  நாகேஸ்வர ராவ் கவனிப்பார் எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.