சிக்கன் சாப்பிட்டால் கொரோனா வரும் என்று நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு!
கொரோனா வைரஸ் பீதி காரணமாக சமூக ஊடகங்களில் தொடர்ந்து பல வதந்திகள் பரவி வருகின்றன. கோழி இறைச்சி சாப்பிட்டால் கொரோனா வைரஸ் வரும் என்று யாரோ ஒருவர் சமூக ஊடகத்தில் பதிவிட அது வைரல் ஆனது. இதனால் கோழி இறைச்சி, முட்டை விலை சச்சரவெனக் கீழே இறங்கியது.
சிக்கன், முட்டை சாப்பிட்டால் கொரோனா வரும் என்று நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்குவதாக கோழிப்பண்ணை வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பீதி காரணமாக சமூக ஊடகங்களில் தொடர்ந்து பல வதந்திகள் பரவி வருகின்றன. கோழி இறைச்சி சாப்பிட்டால் கொரோனா வைரஸ் வரும் என்று யாரோ ஒருவர் சமூக ஊடகத்தில் பதிவிட அது வைரல் ஆனது. இதனால் கோழி இறைச்சி, முட்டை விலை சச்சரவெனக் கீழே இறங்கியது. கோழிகளை வைத்துப் பராமரிப்பதே செலவு என்ற நிலையில் கறிக்கோழிகள் மொத்தமாக அழிக்கப்படும் செய்திகள் எல்லாம் வந்துகொண்டே இருக்கிறது.
மத்திய, மாநில அரசுகள், உணவு பாதுகாப்பு அமைப்பு என பலரும் சிக்கன் சாப்பிட்டால் கொரோனா வரும் என்ற தகவல் தவறானது என்று கூறியும் கோழி இறைச்சி மீதான பயம் மட்டும் போகவில்லை.
இந்த நிலையில், சிக்கன் சாப்பிட்டால் கொரோனா வரும் என்று நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்குவதாக கோழிப் பண்ணை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து முட்டை கோழிப் பண்ணையாளர் வர்த்தக சங்க நிர்வாகி சுப்பிரமணியன் கூறுகையில், “கொரோனா பீதி காரணமாக நாமக்கல்லில் 15 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மேலும் 4 கோடி முட்டைகள் தேக்கம் அடையும் நிலை உருவாகியுள்ளது.
கோழி இறைச்சி சாப்பிட்டால் கொரோனா வரும் என்று யாராவது நிரூபித்தால் அவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கத் தயாராக உள்ளோம். ஒரு கிலோ ரூ.90க்கு விற்பனையான கறிக்கோழி தற்போது 50க்கும் கீழ் இறங்கிவிட்டது. இதற்கு காரணம் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்படுவதுதான். வதந்தி பரப்பிய நான்கு பேரை கைது செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி” என்றார்.