சிஏஏ போராட்டக் குழுவினருக்கு சாதகமான பதில்? – எடப்பாடி பழனிசாமி முடிவால் பா.ஜ.க அதிர்ச்சி
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பொது மக்கள் போராடி வருகின்றனர். போராட்டக் குழுவினர் நேற்று இரவு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர். சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது.
சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டக் குழுவினருக்கு சாதகமான அறிவிப்பு ஒரு சில நாளில் வெளியாகும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக வெளியான செய்தியால் பா.ஜ.க-வினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பொது மக்கள் போராடி வருகின்றனர். போராட்டக் குழுவினர் நேற்று இரவு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர். சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது.
போராட்டக் குழுவினர் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது, “அப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவற்றை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தினோம்.
அதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிலுள்ள சில சந்தேகங்களுக்கு மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதாகவும், விளக்கம் கிடைத்த உடன் போராட்டக் குழுவுக்கு சாதகமான பதில் அளிக்கப்படும் என்று கூறினார். முதல்வர் அளித்த வாக்குறுதியை போராட்டக் களத்தில் உள்ளவர்களுடன் கலந்து பேசி போராட்டம் கைவிடுவது பற்றி முடிவு செய்யப்படும்” என்றனர்.
தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் அ.தி.மு.க அரசு கலைக்கப்படும் என்று எச்.ராஜா சில தினங்களுக்கு முன்பு எச்சரக்கைவிடுத்திருந்தார். இந்த சூழ்நிலையில் சாதகமான முடிவு வெளியாகும் என்று முதலமைச்சர் போராட்டக் குழுவினரிடம் கூறியிருப்பது பா.ஜ.க-வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.