சாதி அடிப்படையில் ஆந்திராவில் 5 துணை முதல்வர்கள்: ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி!
ஆந்திராவில் 5 துணை முதல்வர்களை நியமித்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி காட்டியுள்ளார்.
ஆந்திரா: ஆந்திராவில் 5 துணை முதல்வர்களை நியமித்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி காட்டியுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியதால் ஆந்திர முதல்வரானார் அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி. இவர் முதல்வர் பதவி ஏற்றது முதல் பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறார்.
இந்நிலையில் ஆந்திராவில் 5 துணை முதல்வர்களை நியமிக்க முடிவெடுத்துள்ளார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இன்று கலந்துகொண்ட அவர், 5 துணை முதல்வர்கள், 25 கேபினேட் அமைச்சர்கள் தேர்வு செய்யப்படும் என்றும், இவர்களின் பதவிக்காலம் 30 மாதங்கள் எனவும் கூறியுள்ளார். மேலும் தேர்ந்தெடுக்கப்படவுள்ள துணை முதல்வர்கள் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் பழங்குடி வகுப்பை சேர்ந்தவர்களாவார்கள். இவர்கள் யார் என்ற விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இது குறித்து கூறியுள்ள முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஆட்சியிலும், கட்சியிலும் அனைவரும் சமம் என்றும் அரசின் திட்டங்கள் அனைத்தும், எல்லா மக்களுக்கும் சென்று சேரவேண்டும் என்பதற்காகத் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் இவர்கள் நாளை பதவியேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.