சபரிமலை விவகாரம்: கேரளாவில் முழு அடைப்பு

 

சபரிமலை விவகாரம்: கேரளாவில் முழு அடைப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இரு பெண்கள் நுழைந்ததை கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இரு பெண்கள் நுழைந்ததை கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இந்தத் தீர்ப்புக்கு இந்து அமைப்புகள், பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால், சபரிமலையில் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதைத் தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு போடப்பட்டு, போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் அமல்படுத்தப்பட்டிருக்கும் தடை உத்தரவை ஜனவரி 5-ம் தேதி வரை கேரள அரசு நீட்டித்துள்ளது.

இதனிடையே, 21 நாள் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை பலத்த பாதுகாப்புக்கு இடையே கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. கோயிலில் மகர விளக்கு பூஜை வருகிற ஜனவரி 14-ம் தேதி நடைபெறவுள்ளது. ஜனவரி 20-ம் தேதி கோயில் நடை சாத்தப்படுகிறது.

இந்த சூழலில் நேற்று அதிகாலை 3.45 மணி அளவில் கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய 40 வயதுடைய இரு பெண்கள் சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, கேரள அரசைக் கண்டித்து அங்கு மீண்டும் போராட்டம் தொடங்கியுள்ளது. முழு அடைப்பு போராட்டம் நடத்த இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு பாஜக-வும் ஆதரவு தெரிவித்துள்ளது. அதன்படி, கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால், அம்மாநிலத்தில் இன்று நடைபெறவிருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளதாலும், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாலும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடைகளை அடைக்க நிர்பந்திப்பவர்களை கைது செய்யுமாறு அம்மாநில டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழக மற்றும் கேரள பேருந்துகள் இரு மாநில எல்லையான களியக்காவிளையில் நிறுத்தப்படுகின்றன. வெளியூர்களிலிருந்து ரயில் மூலம் திருவனந்தபுரம் வந்த பயணிகளை காவல்துறை வாகனங்களில் போலீசார் அழைத்து செல்கின்றனர்.