‘சபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பு தரமாட்டோம்’: கேரள அமைச்சர் சர்ச்சை கருத்து!
இதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆலோசனை நடத்தினார்
கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் சென்று அனைத்து வயது பெண்களும் வழிபாடு செய்யலாம் என்று கடந்தாண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் வரலாறு காணாத தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து 65 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. மனுக்கள் மீதான தீர்ப்பில் நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கொண்ட அமர்வு, இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது. மேலும் இதுகுறித்த விசாரணை நடந்து முடியும் வரை அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குள் செல்லலாம் என்ற நிலை தொடரும் என்று உத்தரவிட்டது.
இருப்பினும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தெளிவின்மையாக இருப்பதால் இதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆலோசனை நடத்தினார். அதில், சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்க கூடாது என்று சிபிஎம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரள அமைச்சர் சுரேந்திரன், ‘சபரிமலைக்கு வரும் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்குப் பாதுகாப்பு தரமுடியாது. நீதிமன்றத்தில் உரிய அனுமதி வாங்கி வந்தால் மட்டுமே பாதுகாப்பு தரப்படும் என்றும் சபரிமலைக்கு வர நினைக்கும் பெண்கள் நீதிமன்றத்தை நாடட்டும்’ என்று கூறியுள்ளார்.
சபரிமலை விவகாரத்தில் முறையான நடவடிக்கையை கடைப்பிடியுங்கள் என்று உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிட்டுள்ள நிலையில், அமைச்சரின் இந்த கருத்து பரபரப்பைக் கிளப்பியுள்ளது.